ஆலயங்கள்

இணுவில் அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் ஆலயம் (மஞ்சத்தடி)

இணுவில் கிழக்கும் கோண்டாவில் வடமேற்கும் எல்லையாக அமைந்த இடத்தை மையமாகக் கொண்டது மஞ்சத்தடி என்னும் பெருநிலப்பரப்பாகும். இப்பகுதியில் ஏற்கனவே அமைந்துள்ள கப்பனை (அரசோலை) பிள்ளையார் ஆலயச் சூழலில் அவதரித்தவர் பெரிய சந்நியாசியார். இவர் காரைக்கால் பதியிலுறைந்த மாரியம் பாளிடம் நேரில் திருவமுதை வாங்கி உண்டதால் சித்தரானவர். காரைக்கால் சிவாலயம், இணுவில் கந்தசுவாமி கோயில் ஆகியவற்றின் ஆலயப் பணியில் இணைந்திருந்தார்.

இணுவில் கந்தப்பெருமான் கனவில் விடுத்த அன்புக் கட்டளையை ஏற்று திருமஞ்சமொன்றை நிறுவச் சித்தங் கொண்டார். காரைக்கால் சிவாலயத்தில் அணிதிரண்ட பக்தர்களுடன் கலந்துரையாடிய பயனாக முருகப் பெருமானின் திருமஞ்சத்துக்கான சிறந்த மரங்களை எமதூர் மக்களிடம் அன்பளிப்பாகப் பெற்றுத் தமது தொண்டர்களின் சிரமதான மூலம் வெட்டிய மரங்களைத் தமது வாழ்விடத்தருகேயுள்ள வெளி நிலத்தில் குவித்தனர்.

அவ்விடத்தில் வைத்தே திருமஞ்சப் பணி (அடித்தளமான கீழ்ப்பகுதி) ஆரம்பமானது. திருமஞ்ச வேலைகள் முதலில் தொடங்கி அடித்தளம் பூர்த்தியானதும் மிகுதி வேலைகளுக்காக இங்கிருந்து கந்தசுவாமி கோயிலுக்கு உருட்டிச் செல்லப்பட்டது. இத் திருமஞ்சவேலை தடையின்றி நடைபெறுவதன் பேரில் கந்தசுவாமி கோயிலில் சென்று வழிபட நேரம் ஒதுக்காது மஞ்சவேலை செய்யும் சூழலில் வணங்குமாறு முருகப் பெருமான் பெரிய சந்நியாசியாரிடம் ஒரு வேலினைத் தந்தார்.

சித்தரும் முருகப்பெருமானால் வழங்கப்பட்ட வெள்ளியினாலான வேலைத் தமது வாழ்விடத்தில் வைத்துப் பூசித்து வழிபட்டு வந்தார். பெருஞ்சித்தர் தாம் அவதரித்த காரணமான இறைபணிகள் யாவும் நிறைவு கண்டதும் இறைவனின் நியதிப்படி சமாதியடையும் காலமும் கைகூடியது. தமது சித்து மகிமையால் முக்காலத்தை அறிந்த பேறாகத் தமது சமாதியடையும் நேரகாலத்தை மூன்று மாதங்களுக்கு முன்பே தமது பக்தர்களுக்குத் தெரிவித்திருந்தார். அதன் தேவை கருதி ஒரு வாரத்துக்கு முன்பாகவே (தற்போது ஆலயக் கருவறை அமைந்த இடத்தில்) இறைவனின் சித்தப்படி தமது பக்தர்கள் மூலம் சமாதிக் கிடங்கைத் தோண்டுவித்தார்.

சமாதிக்குரிய பொருட்களையும் தமது முதன்மைப் பக்தர்கள் மூலம் சேகரித்தார். ஏற்கனவே தமது பக்தர்களிடம் கூறிய சமாதியடையும் நேர காலப்படி 1917ஆம் ஆண்டு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று சமாதியடைந்தார். அவரால் தோண்டுவிக்கப்பட்ட கிடங்கில் பெரிய சந்நியாசியாரின் சமாதிக் கிரியைகளை அவரின் மூத்த சகோதரர் வேலாயுதர் தொண்டர்களினதும் உறவினர்களினதும் உதவியுடன் உரிய விதிமுறைப்படி நிறைவேற்றினார்.

சமாதி அமைத்து அபிஷேகங்கள், பூசைகள் மற்றும் சகல பொறுப்புக்களையும் மேற்கொண்ட வேலாயுதர் பெரியாரின் சமாதியடைந்த பதினாறாம் நாள் அவரால் வழிபாடு செய்யப்பட்ட வேலைச்சமாதி மீது நிறுவினார். அவ்விடத்தில் சிறுகுடிசை அமைத்து தினமும் ஆசார முறைப்படி பூசைகள் செய்து வந்தார். பெரியாரின் பக்தர்களும் உறவினரும் அயலாரும் நாளாந்தம் தவறாது வழிபட்டனர். இவ்வழிபடு நிலையமே பிற்காலத்தில் ‘அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் ஆலயம்’ என வழங்கப்பட்டு வருகிறது.

வேலாயுதர் சந்நியாசியார்

பெரிய சந்நியாசியார் காரைக்காலில் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு திருநீறிட்டு மணிமந்திரம் ஓதி உடல், உள பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டோரைக் குணப்படுத்தியது போல வேலாயுதரும் திருநீறிட்டு மணி மந்திரமோதி மக்களுக்கு உதவினார். ஏற்கனவே இவர் திருமணமானபோதும் ஆலயப் பொறுப்பேற்றதும் சந்நியாசக்கோலம் பூண்டு ‘ஆலய வளர்ச்சியிலும் பக்தர்களின் நலனிலும் தம்மை இணைத்துக்கொண்டார்.

வேலாயுதர் சந்நியாசியாரின் கோலமும், அருளுடமையும், ஆலய வழிபடு முறையும் பூசை ஒழுங்குகளும் சிறப்பாக நடைபெற்றதால் ஆலய வழிபாட்டுக்கும் திருநீறு பெற்று உடல் உளப் பிணி அகற்றவுமென இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் பேராதரவில் இவ்வாலயத் திருப்பணி முன்னேறியது. பெரிய சந்நியாசியார் தமது ஓய்வு நேரங்களில் நாட்டார் பாடல் கூத்து (நாடகம்) கலைஞர்களை ஊக்குவித்து ஆதரவு தந்தது போல வேலாயுதர் சந்நியாசி யாரும் கலை வளர்க்கும் பணியில் பிரகாசித்தார். இறை நாட்டப்படி வேலாயுதர் சந்நியாசியார் சமாதியடைந்தார்.

ஆறுமுகம் சந்நியாசியார்

தந்தையாரான வேலாயுதர் சந்நியாசியாரின் சமாதிக் கிரியைகளை நிறைவு செய்ததும் மகன் ஆறுமுகம் சந்நியாசியார் தாமும் சடைமுடி மற்றும் தாடி வளர்த்த சந்நியாசிக் கோலம் பூண்டு ஆலய நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இவரும் தம் முன்னோரின் வழிமுறைப்படி ஆலயத்தை நாடி வருபவர்களுக்கு திரு நீறிட்டு மணி மந்திரமோதி உடல் உளப் பிணிகளை அகற்றினார். ஆலய வளர்ச்சியையும் பொது மக்களின் வேண்டுதலுக்கமைவான பூசைகள், அபிஷேகங்கள், விழாக்கள் நடாத்துவதன் பேரில் நித்திய நைமித்திய பூசைகளை விதிமுறைப்படி நடாத்த அந்தணப் பெரியார் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

ஆலய வளர்ச்சியும் பக்தர்கள் அயலவர்களின் பேராதரவும் ஏனைய விழாக்களும் பெருவிழாக்களும் நடாத்த இறையருள் கைகூடியது. ஆறுமுகம் சந்நியாசியாரின் காலத்தில் பெரிய சந்நியாசியார் சமாதியடைந்த திதியான சித்திரை மாதத் திருவோண நட்சத்திரத்தன்று தீர்த்த விழா அமையும் வண்ணம் பன்னிரு திருவிழாக்கள் பெருவிழாக்காலமாக அமைந்தன. இவ்வாலய வளர்ச்சியில் பூசைகள், விழாக்கள் சிறப்பாக நடைபெற்ற காலத்தில் ஆறுமுகம் சந்நியாசியார் சமாதியடைந்தார்.

ஆலயப் பொறுப்பேற்ற அவரின் மகன் மூலம் அறங்காவலர் குழு ஒன்று ஆலய பரிபாலனஞ் செய்தது. அடுத்த அறங்காவற் குழுவினர் தெரிவில் வேறொரு குழுவினர் நியமிக்கப்பட்டனர். ஆறுமுகம் சந்நியாசியாரின் பக்தனும் இவ்வூர் மைந்தனுமான தனபாலசிங்கம் (சோதிலிங்கம் சாமியார் தலைமையில்) பல பொது மக்களின் பொருளுதவியுடனும் ஆலயச் சூழலிலமைந்த விவேகானந்த கிராம முன்னேற்றச் சங்க உறுப்பினரின் சிரமதானப் பணியுடனும் ஆலயத் திருப்பணி ஆரம்பமானது.

கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை ஆறடி ஆழ அத்திவாரமிட்டு வெள்ளைக் கற்களால் அமைக்கப்பட்டன. ஆலய உள்வீதியின் வெளிச்சுற்று மதிலும் ஆறுமுகசுவாமியின் வாசல் முகப்பும் அழகிய வர்ணம் தீட்டப்பட்ட புதுப் பொலிவுடன் அமைந்தது. இக்கால அறங்காவற் குழுவினர் உள்வீதி முழுவதும் செப்பனிட்டுச் சீமெந்தினாலான நில வேலையையும் ஓட்டினால் வேயப்பட்ட கூரை வேலையையும் நவீன அமைப்புடன் செய்து கும்பாபிஷேகமும் நடைபெற உதவினர்.

புதிய சித்திரத்தேர்

இவ்வாலயத்தின் சூழலில் வாழ்ந்த தேர்த்திருவிழா உபயகாரர் பல வருடங்களாகக் கட்டுத்தேரில் எம் பெருமான் வீதியுலா வர ஏற்பாடு செய்தனர். இறையருளும் விழா உபயகாரரின் நிதிவளமும் சேரவும் திருவருள் கைகூட்டவும் ஆறுமுகப் பெருமானின் ஊர்வலத்துக்கான புதிய சித்திரத்தேரை உருவாக்கினர். சில வருடங்களின் பின் இறைவனின் நாட்டப்படி வேறொரு சித்திரத்தேரும் சிவசக்தியின் உலாவுக்காகச் செய்யப்பட்டது.

இவ்வாலயம் அமைய மூல காரணமாகக் கருவறையிலடக்கத்திலிருக்கும் பெரிய சந்நியாசியாரின் திருவுருவப்படம் தீர்த்தத்திருவிழாவன்று ஆலய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் பெருவிழாக் கால அன்னதானம் வழங்குவது போல இவ்வாலயத்திலும் பன்னிரு நாட்களும் சிறப்பான அன்னதானம் வழங்கப்படுகிறது. பிற்காலத்தில் நடைபெற்ற அறங்காவற்குழுவினரான குழுவினர் தமது விடா முயற்சியுடன் தேர்களின் தரிப்பிடம், ஆலய முன் மண்டபம் ஆகிய திருப்பணிகளையும் செய்துள்ளனர். நித்திய நைமித்திய பூசைகள் விழாக்கள் யாவும் வழமை போல நடைபெறுவது இறையருளின் பெருமையாகும்.

தீர்த்தப்பவனி

இவ்வாலயம் அமைய மூல காரணமாக அமைந்த சித்தர் பெருமானின் திருவருள் நெறிப்படுத்தலின் தூண்டுதலாக அமைய இவ்வாலயத் திருவிழா அன்று பெரிய சந்நியாசியார் சித்தரான திருவருட் சந்நிதியான காரைக்கால் சிவாலயத்துக்குப் பவனியாக முருகப் பெருமானை எழுந்தருளச் செய்து தீர்த்தமாடி வருவது வழக்கமாக இருந்தது.

இப்பவனியில் எம்பெருமான் சப்பறத்தில் அமர்ந்திருக்க சகடை மீது ஊர்ந்து செல்ல மங்கல வாத்தியமும் பக்தர்களின் பண்ணிசையும் ஒலிக்க காற்றடித்து ஒளியேற்றும் விளக்குகளைப் பணியாளர் சுமந்து வர முன்னிரவு நேரம் அற்புதமான விழாக் கோலமாகும். பிற்காலத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையும் பக்தர்களின் மனமாற்றமும் உடன் செல்ல இன்று இவ்வாலயத்திலேயே தீர்த்தவிழா வெகு சிறப்பாக
நடைபெறுகிறது.

இவ்வாலயத்தில் அன்று நாட்டார் பாடல் கூத்துக்கலைகளுக்கு நல்லாதரவு கிடைத்தது. இதன் பேறாக இவ்வாலயச் சூழலில் கலைகள் பலவும் போதிக்கவும், நல்லாசிரியர்கள், பண்டிதர்கள் மூலம் சமய நல்வழி வகுப்புக்கள் பேணவும் இறையருள் பாலித்தது. இன்று முன்பள்ளி, சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கம், கூட்டுறவுப் பண்டகசாலை, கலைவிழாக்கள் நடைபெறும் கலையரங்கு இவை யாவும் சிறப்புடன் இயங்குவது இணுவில் திருவூரின் சமய கலை கலாசாரப்பண்புக்கு அத்திபாரமாக அமைய முருகப்பெருமானின் அருள் பாலிக்கிறது.

இத்திருத்தலத்தின் சூழலில் இருந்து ஆலயப் பணி, சிரமதானப்பணி, கல்விப் பணியாற்றிய தொண்டர் பண்டிதர் வே.சண்முகலிங்கம் ஆசிரியர் இவ்வாலயத்துக்கான ஊஞ்சற் பாடலையும் பாடித் தந்துள்ளார். இவ்வாலயத்தின் அரும்பணிகள் சிறக்கவும் சூழலிலமைந்த சுற்றுச்சூழல் பெருக்கவும், அருகிலமைந்த பாலர் வகுப்பு, சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பொதுவான அறப்பணிகளின் பிதாமகரான பலன் கருதாச் சமய சமூகத் தொண்டர் ஆ.செல்லையா என்றும் நினைவு கூரத் தக்கவர்.

அவனருளாலே அவன்தாள் வணங்கி அரும்பணியாற்றிய யாவரும் அருளாளர்களேயாவர். அண்மையில் மூன்று வருடகாலமாக நிர்வாகப் பணியேற்ற குழுவினரின் பெருமுயற்சியாகப் பொது மக்களின் உதவியுடன் ஆலய முகப்பு வேலைகள் சீரமைக்கப்பட்டு ஆலயப் பெருமையை உணர்த்துகிறது. மேலும் தேர்களின் தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?