ஆலயங்கள்

இணுவில் சிவகாமி அம்மன் கோவில்

இணுவில் திருவூரில் அருள் பாலிக்கும் ஒரே தாய்த் தெய்வத்தின் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவே இத்திருத்தலம் பிரகாசிக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்தியத் தமிழ் மன்னர்கள் யாழ் மண்ணை ஆட்சி செய்த காலத்தில் இணுவில் திருவூரை மையமாக வைத்த பெரும்பாகப் பிரிவில் நிர்வாகப் பொறுப்பேற்ற திருக் கோவலூர் பேராயிரவன் என்பவன் இணுவில் கிழக்கில் வாழ்ந்தான். இவன் ஒரு சிறந்த சக்தி உபாசகர். தமது குலதெய்வமான தில்லை நடராசப் பெருமானின் நாயகியாம் சிவகாமி அம்பாளைத் தனது வாழ் விடத்திலும் வழிபட எண்ணி தென்னிந்தியாவிலிருந்து சிவகாமி அம்பாளின் கருங்கல்லினாற் செதுக்கப்பெற்ற முழு உருவச் சிலையைத் தருவித்து இவ்விடத்தில் ஆலயம் நிறுவி வழிபட்டு வந்தான்.

அம்பாளை இவ்வூர் மக்களும் பேரன்புடன் வழிபாடு செய்தனர். அம்பாளின் பெருங்கருணையினால் மன்னனும் மக்களும் வெகுசிறப்புடன் வாழ்ந்தனர். இவ்வாலயம் பதின்நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. இவ்வாலயம் அமைந்த காணியும் சூழலும் “சிதம்பர வளவு” என்னும் பெயருடன் இன்றும் வழங்கப்படுகிறது. பேராயிரவனின் பிற்காலத்தில் இப் பகுதியை ஆண்டு வந்த காலிங்கன் என்பவனும் தமது அரச கடமைகளைத் தொடங்குமுன் அம்பாளை உள்ளன்போடு வழிபட்டு வந்ததுடன் இவ்வாலயத்தின் மேல்திசையில் பத்திர காளியம்மன் உடனுறையும் மாணிக்க பைரவர் சந்நிதியைக் காவற் தெய்வமாக அமைத்து வழிபட்டும் நன்மை அடைந்தான்.

காலங்கள் கடந்தன. மேலைத்தேய போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என முத்தரப்பினரும் இலங்கையின் பல பகுதிகளுக்கும் வந்து ஆலயங்களை அழித்தனர். இதனால்  எமது ஊரில் உள்ள இவ்வாலயம் உட்பட்ட பல ஆலயங்களும்  அழிக்கப்பட்டன. எமது சமய வழிபாடும் தமிழ்ப் பண்பாடும் தடைசெய்யப்பட்டன. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஒல்லாந்தராட்சியின் பிற்காலத்தில் இவ்வூரைச் சேர்ந்த மக்கள் இவ்வாலயத்தை ஒரு சிறு குடிசையாக அமைத்து அமைதியாக வழிபாட்டைச் செய்து வந்தனர்.

அம்பாளின் அருட்சிறப்பு 

ஏறக்குறைய 250 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சின்னத்தம்பிப்புலவர் என்பவர் ஒல்லாந்தரின் ஆட்சியில் அரச பணியாற்றி வந்தார். இவரும் தமது பக்தி மேலீட்டினால் அன்னை சிவகாமியின் ஆலயப் பணியுடன் வழிபாட்டையும் நடாத்தி அன்னையின் மீளா அடிமையாகச் சிறப்புடன் வாழ்ந்தார். இவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டதால் இவர் சிறையிலடைக்கப்பட்டார். புலவர் தமது துன்பத்திலிருந்து சிவகாமியை வேண்டி தன்னை விடுவிக்குமாறு “சிறை மீட்புப் பதிகம்” ஒன்றைப் பாட ஆரம்பித்து ஏழாம் பாட்டில் மனமுருகிப் பாடிய போது சிறைக் கதவு தானாகவே உடைந்தது.

புலவர் சிறையிலிருந்து விடுவிக்கப் பெற்றார். இதனால் புலவரின் திறமையும் சிவகாமி அம்பாளின் மகிமையும் மேலோங்கியது. புலவர் நன்றிக்கடனாக சிவகாமி அம்பாள்மீது ஊஞ்சற் பாடல் உட்பட சிவகாமி அம்பாளின் பேரில் பல நூல்களையும் எழுதினார்.

ஆலயத் திருப்பணிகள்

அந்நியர் ஆட்சியில் அழிந்த ஆலயம் முன்னூறு வருடங்களுக்கு முன் பக்தர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட மண்குடிசை காலஞ்செல்ல சுண்ணாம்புக் கலவையினாலான ஆலயமாக அமைந்தது. அம்பாளின் பேரருளினால் இவ்வாலயத்தின் வடபால் வாழ்ந்த கற்பகம் என்பவர் திருவாக்குச் சொல்லிக் கிடைத்த சிறுதொகையில் ஆலயத் திருப்பணியைச் செய்ய முற்பட்டார் சிறிது காலத்தில் கற்பகம் மறுமை எய்தினார். சிவகாமி அம்பாளின் பேரருளின் வழிகாட்டலில் கற்பகத்தின் இளைய மகளான திருமதி ந.சிவகாமசுந்தரி என்னும் பேரிளம்பெண் திருவாக்குச் சொல்ல முற்பட்டார்.

ஆலயத் திருப்பணியின் பேரில் திருவாக்குச் சொல்லும்போது ஒரு பணம் (ஆறு சதம்) மட்டும் பெற்று வந்தார். சிறுகச் சேர்த்த பணம் ஆண்டுகள் செல்லச் செல்ல பெரு நிதியாக வளர்ந்தது. சிவகாமி அம்பாளின் திருப்பணிக்கென்றே தன்னை அர்ப்பணித்துத் திருவாக்குச் சொல்வதை எம்மவர் சாத்திரஞ் சொல்வதாகக் கருதி சாத்திரம்மா என்றே அன்புடன் அழைத்தனர். சாத்திரம்மாவின் கனவிற் தோன்றிய சிவகாமி அம்பாள் தமது ஆலயத்திருப்பணியை நிறைவாகச் செய்விப்பதன் பேரில் இவ்வூரில் இல்லங்கள் தோறுஞ் சென்று பிடியரிசி எடுத்துப்பணியாற்றுமாறு தெரிவித்தார்.

அன்று தொட்டுச் சாத்திரம்மா திருவாக்குச் சொல்லி முடிந்ததும் பிடியரிசி எடுக்கும் பணியை ஆரம்பித்தார். அன்னை சிவகாமியின் திருப்பணிக்கென பிடியரிசியெடுக்க வரும் சாத்திரம்மாவின் அயராத பணிக்கு இல்லத்தரிசிகள் பிடியரிசி மட்டுமல்ல நாளாந்தம் சேரும் சிறுதொகைப் பணத்தையும் சேர்த்து மன நிறைவுடன் வழங்கினர். திருப்பணியும் வளர்ந்தது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் யாவும் கருங்கற்களினால் சிறப்பான கட்டுமானப் பணியாக அமைந்தன.

இதர பணிகளுடன் ஐந்து தள இராசகோபுரம், முன் மணி மண்டபம் யாவும் கருங்கற்களினாலும் வெள்ளை வைரக் கற்களினாலும் சிறப்பாகக் கட்டி முடிக்க நாற்பது வருடங்கள் நீடித்தது. நாற்பது வயதுடைய பேரிளம் பெண்ணான சாத்திரம்மா அன்னை சிவகாமியின் திருப்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்து அயராது தானொருத்தியாக நின்று அரும்பணியாற்றியமை யாவராலும் நினைவு கூரப்படுகிறது. எண்பது வயது மூதாட்டியாக ஓய்வெடுத்தார்.

இத்தள்ளாத வயதிலும் சிவகாமி அம்பாள் மீது அகலாத பக்தி மிகுந்த அன்பர்கள் சிலரை அழைத்து அம்பாளின் இதர பணிகளான விட்ட குறை, தொட்ட குறைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தினார். சாத்திரம்மாவின் ஆரம்ப காலத்திருப்பணியில் ஒரு பகுதியான மடைப்பள்ளி உள்வீதியின் வெளிச்சுவர் வேலைகளை ஆலயத்தின் தென்பால் சுருட்டு வேலையை நடாத்திய வ.கா.வயிரவப்பிள்ளை செய்ய முற்பட்டார். இவரின் தொழிற்சாலைப் பணியாளர்களின் நாளாந்தக் கூலியின் பகுதியாக ஒரு கட்டுச் சுருட்டுக் கூலியான அரைச்சதம் சேர்ந்த பெருநிதியில் குறிப்பிட்ட திருப்பணி நிறைவடைந்தது.

சாத்திரம்மாவின் பிற்காலத்தில் (1975 இல்) அன்னாரின் வேண்டுலை ஏற்ற அவ்வூர் அன்பர்கள் ஒன்று சேர்ந்து பொது மக்களின் பேராதரவுடன் ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டனர். முதலில் ஆலயத்தின் தெற்கு உள்வீதி, மேற்கு, வடக்கு உள் வீதி நில வேலையும் மேற்கு, வடக்கு கூரை வேலையும் செ.மதியாபரணத்தின் கூரை மர உதவியுடன் பொது வேலையாக நிறைவு கண்டது. மேலும் மின் இயந்திரத்துடனான நீர்த்தாங்கியும், பூங்கொல்லை நீர் இறைக்கும் வாய்க்காலும், நவக்கிரக முன் மண்டபக் கூரை வேலை, தேர்முட்டியின் குறை வேலையுடன் படிக்கட்டு வேலை, அன்னதான மண்டபம் யாவும் நிறைவு செய்யப் பதினைந்து வருட காலம் நீடித்தது.

அயராத இப்பணிகளின் சிறப்பு இதிற் பங்கு பற்றிய சகல அன்பர்களினதும் சிரமதானப் பணி பெரும் பங்காற்றியது. இத் தொண்டர்கள் இணுவில் சைவத் திருநெறிக்கழகமாக இயங்கினர். இச்சம காலத்தில் கடினமான திருப்பணி செய்ய இயலாத இக்கழகத்தினர் முதுமையினாலும் நாட்டின் யுத்தகால அமைதியின்மையாலும் ஆன்மிகப் பணியை நாடினர். இப்பணி இன்று அறநெறி கூறும் அறப்பணியாகத் தொடர்கிறது.

சாத்திரம்மா ஆலயத் திருப்பணியைத் தொடங்க முன் சிறு மண் குடிசையாக இருந்த இவ்வாலயத்தை இச்சூழலில் வாழ்ந்த கனகர் சின்னம்மா என்பவர் அதிகாலையில் வந்து உள்ளும் புறமும் பெருக்கிச் சுத்தம் செய்வார். இவரது மகன் சங்கரலிங்கம் (வயது 10) இவ்வூர் சி.பேராயிரமுடையான் (வயது 10) ஆகிய இருவரும் பசுஞ்சாணி கொண்டு ஆலயத்தை மெழுகிச் சுத்தம் செய்தனர். பிற்காலத்தில் இவ்விருவரும் சிறந்த அருளாளர்களாகத் திகழ்ந்தனர். சைவத்திருநெறிக் கழகத்தினர் ஆலயத்திருப்பணி செய்த காலங்களில் இவ்வூர் தி.சி.சண்முகலிங்கம் என்பவர் தான் சார்ந்த நண்பர்களுடனும் ஊர்ப் பொதுமக்களின் உதவியுடனும் பல ஆலயத் திருப்பணிகளைச் செய்து நற்புகழீட்டினார்.

ஆலயப் பூசைச் சிறப்பும் பெருவிழாக்களும்

இவ்வாலயத்தில் எழுபது வருடங்களுக்கு முன் சிவஸ்ரீ சதாசிவக்குருக்கள் பயபக்தியுடன் அன்னையின் அருள் பிரகாசிக்க பூசைப் பணியை ஏற்றார். அம்பாளின் அர்ச்சனைக்குரிய நறுமலரின் தேவை கருதி இவ்வாலயச் சூழலில் வாழ்ந்த தொண்டர்களை ஊக்குவித்து ஆலயத்தின் வடபால் அரியதோர் நந்தவனத்தை நிறுவ உதவினார். இந்த நந்தவனத்தின் நறுமலர்கள் அன்றிலிருந்து இன்று வரை அம்பாளின் பூசைக்குரிய புனித மான பொருளாக அமைந்துள்ளது. சதாசிவக் குருக்களைத் தொடர்ந்து உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் பிரதம குருவான சிவஸ்ரீ சபாரத்தினக்குருக்கள் வெகு சிறப்பாக பூசைப் பணியை ஏற்றார்.

இக்காலத்தில் ஆலய வளர்ச்சியும் ஆரம்பமானது. அவரின் முதுமையைத் தொடர்ந்து அவரின் மகன் சிவஸ்ரீ பரமேஸ்வரக் குருக்கள் செய்த அரும்பணி இவ் வாலயத்தின் சிறப்பை மெருகூட்டியது.பரமேஸ்வரக்குருக்கள் மலேசியாவில் ஆலய பூசை செய்ய அழைக்கப்பட்டதால் தற்போதைய பிரதம குருவான சிவஸ்ரீ சோமசபேசக் குருக்கள் பொறுப்பேற்று வெகு சிறப்பாகவும் நேரந்தவறாமலும் இன்றுவரை அரும்பணியாற்றி வருகிறார். இவரது காலத்திலே தான் ஆலயத்தின் பல வளர்ச்சிகளும் தொண்டர்களின் பூரண ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.

இவ்வாலயப் பெரு விழாக்கள் பங்குனி மாத உத்தர நட்சத்திரத்தன்று தீர்த்தத் திருவிழாவை மையமாக வைத்து முந்திய பன்னிரு திருவிழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் இவ்வாலயத்தில் வருடாந்தப் பெருவிழாக்களுடன் நவராத்திரி மற்றும் சக்திக்குரிய விரத காலங்களுக்கான விசேட பூசை அர்ச்சனைகள் பெருவிழாக்களாகவே இங்கு நடைபெறுவதால் எம்மக்களிடையே சக்தியின் மீது பேரன்பு வைக்கவும் உலக மாதாவின் பெருங்கருணை பெறவும் இறையருள் பாலித்துள்ளது.

மகிடாசுரன்

சக்தியின் பேரருளால் இவ்வாலயச் சூழலில் வாழ்ந்த அனைவரும் தமது பக்தி மேலீட்டினால் ஒரு திருப்பணியிலீடுபட்டுச் சிறப்பிக்க முன்வந்தனர். இச்சூழலிலுள்ள விவசாயம் மற்றும் சுருட்டுக் கைத்தொழில் செய்பவர்களான பரமு, நாகலிங்கம், க.முருகேசு, ஆறுப்பிள்ளை, ஆறுமுகம், ஐயாத்துரை, செல்லையா, வேலுப்பிள்ளை, சிவக்கொழுந்து போன்ற பலர் ஒன்று சேர்ந்து நாளாந்தம் ஒரு கட்டுச் சுருட்டுக்கூலியான அரைச்சதம் மற்றும் அயலில் சேர்த்த பிடியரிசியில் சேர்ந்த பணம் யாவற்றையும் ஒரு வருட காலத்தில் சேமித்தனர்.

தமது குல தெய்வமான சிவகாமி அம்பாளின் நவராத்திரி இறுதி நாளில் மகிடாசுரன் போரை விமரிசையாகக் கொண்டாடும் நோக்கில் மகிடாசுரனையும் ஆறு தலைகளையும் அம்பாள் பவனி வரும் சிங்க வாகனத்தையும் திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பாசாரி மூலம் அழகிய தோற்றத்தில் செய்வித்தனர். மகிடாசுரன் மற்றும் சிங்க வாகனம் அன்றைய செலவில் முன்னூறு ரூபாவில் செய்யப்பட்டன.

1931 ஆம் ஆண்டு நவராத்திரி விழாவின் இறுதி நாளில் முதன்முதல் மகிடாசுரன் போர் இவ்வாலயத்தில் நடைபெற்றது. மறுநாள் விஜயதசமியன்று சிவகாமி அம்பாள் வாழை வெட்டுதலுக்காக இணுவில் மேற்கிலுள்ள கந்தசுவாமி கோயிலுக்கு எழுந்தருளுவதன் பேரில் நூற்றைம்பது ரூபா செலவில் அழகியவெள்ளைக் குதிரை வாகனமொன்று அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தின் சிறப்பான விழாக்காலத்தில் இவ்வூர் மற்றும் பிறவூர் மக்கள் அணிசேரும் பெருமைக்குரியது.

இதர வாகனங்கள்

இவ்வாலயத்தின் மிருகங்கள், பறவைகள், ஊர்வனவாகியவைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட மரத்திலான வாகனங்கள் பொது மக்களின் அன்பளிப்பாக அமைந்துள்ளன. இவை யாவும் வருடா வருடம் பழுது பார்க்கப்பட்டு வர்ணம் தீட்டிய அழகுடன் பிரகாசிக்கின்றன. மேலும் தண்டிகை, கேடகங்கள், சிம்மாசனம், பத்மாசனம் யாவும் அன்னையின் வீதியுலாவை அணி செய்கின்றன. அன்னை சிவகாமிக்கு உள் வீதியிலிருந்து காவப்படும் ஊர்திகளை விட மேலும் மூன்று சித்திரத் தேர்கள், திருமஞ்சம், திருச்சப்பறம், கயிலாயவாகனம், தங்கரதம், சகடைகள் யாவும் வெகு சிறப்பாகவே அமைந்துள்ளன. அன்னையின் அலங்கார அழகிய சிறப்பை அடியார்கள் இதய பூர்வமாக உணர்ந்து பக்திப் பரவசமாக ஆனந்தமடைகின்றனர்.

தேர்த்திருப்பணி

அம்பாளின் அற்புதத்தை வியந்து பாடிப்பரவும் திருக்கூட்டம் இவ்வூர் வை.தியாகராசாச்சுவாமிகளின் தலைமையில் யாழ் மாவட்டத் திருவாலயங்களின் பெரு விழாக் காலத் தேர் உற்சவ காலத்தில் பக்தி இசையான பசனை பாடி வருவது வழக்கம். இதன் பேறாக நயினை நாகபூஷணி அம்பாளின் தேர்த்திருவிழாவுக்குச் சென்றபோது தமது குலதெய்வமான இணுவைச் சிவகாமி அம்பாளுக்கும் அரிய பெரிய தேர் செய்யவும் சித்தங் கொண்டனர். தமது பசனை பாடும் திருக்கூட்டத்துடன் மாலையில் புறப்பட்டு வீடு வீடாகப் பசனை பாடிச் சென்று நடுநிசி வரை பெற்றோமாக்ஸ் வெளிச்சத்துடன் தேவையான மரங்கள், நிதி யாவற்றையுஞ் சேகரிக்கச் சென்றனர்.

இரவுவேளை வீதிகளிற் பாடிச் செல்வதை விரும்பாத சிலரினால் கல்லடி, பொல்லடி பட்டும் அல்லலுற்றே பல காலம் தேர்த் திருப்பணிக்கு ஆதரவு தேடினர். இவ்வாறு தாளம் தட்டிப் பாடிய வண்ணம் அயலூர் சென்றபோது அதர்மவாதிகள் சிலரால் இவர்களின் பெற்றோமாக்ஸ் அடித்து நொருக்கப்பட்டது. இது போன்ற பல இன்னல்களுக்கு மத்தியில் மூன்று தேர்களுக்கும் தேவைக்கு மிஞ்சிய மரங்களை அன்பளிப்பாகப் பெற்றதுடன் சிறுதொகைப் பணத்தையும் பெற்றனர்.

ஒரு சுபதினத்தில் தேர்த்திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் தொடர்ந்த வேளை தியாகராசா சுவாமிகள் நோய்வாய்ப்பட்டதால் வேலைகள் தடைப்பட்டன. இந்த நிலையில் சுவாமிகள் இணுவில் வர்த்தகரான செ.மதியாபரணத்திடம் மிகுதி வேலைகளைச் செய்யுமாறு ஒப்படைத்தார். மதியாபரணம் தாம் சார்ந்த குழுவினரின் உதவியுடன் தேர்த்திருப்பணி வேலையை நிறைவு செய்து 1977 இல் வெள்ளோட்டமும் நடைபெற்றது. சிவகாமி அம்பாளின் அதியுயர்ந்த தேருடன் விநாயகருக்கும் சிறியதேர் நிறுவப்பட்டது. முருகனுக்கும் ஒரு தேர் நிறுவப்பட்டது.

பாடசாலையிற் கற்கும் மாணவர் அணியொன்று அம்பாள் மீதிருந்த பக்தியினால் பொது மக்களிடமும் வெளிநாட்டு நண்பர்களிடமும் நிதி சேகரித்து அயராத பணியாக சிறந்த சப்பறத்தை 1990 இல் ஆரம்பித்தனர். (யுத்தகால நெருக்கடியினால் பழுதடைந்ததால் சில ஆண்டுகளின் பின் புதியதோர் சப்பறத்தை 20 இலட்சம் ரூபா செலவில் 2011 இல் வீதியுலா வர அன்னை சிவகாமி அருள் பாலித்தாள்.) இவ்விளைஞர்கள் அன்னையை திருமஞ்சத்தில் உலா வருவதற்கான பணியில் ஈடுபட்டு 1992 இல் நிறைவு செய்தனர். இப்பணியாற்றிய சகல இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு சிறப்பான இல்லற வாழ்வு யாவற்றையும் அன்னை தந்து நாடு போற்றும் சற்புத்திரர்களாகப் பிரகாசிக்க வைத்துள்ளார்.

மேலும் அன்னையின் எட்டாந் திருவிழாப் பவனிக்காக அரியதோர் கயிலாய வாகனம் இவ்வூர்ப் பக்தர் மு.குமாரசுவாமி என்பவரின் அன்பளிப்பாக ஐந்து வருடங்களுக்கு முன் அமைத்து உதவப்பட்டது. பெருந்திருவிழாவின் உயர்வான சிறப்பைப் போல இவ்வாலயத்தின் நவராத்திரி விழா வெகு சிறப்பாக அமைந்துள்ளது. நவராத்திரி இறுதி நாளில் மகிடாசுரன் போரும் மறுநாள் மானம்பூ உற்சவமும் சிறப்பானது. இரு நாட்களின் பின் இந்து மகாசபை அணியினரின் உபயமாக நவசக்தி ஓமம், அபிசேகங்கள் பூசைகள் பகலில் நடைபெறும். இரவு அன்னையின் ஊர்வலத்துக்கென அரியதோர் தங்கரதமும் அவர்களின் நண்பர்கள், உறுப்பினர்களின் உதவியுடன் நிறுவப்பட்டு வருடா வருடம் இவ்விழாவினை அலங்கரிப்பது சிறப்பாகும்.

இம்மாத பூரணை அன்று திருவிளக்குப் பூசையும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. எமதூரில் அமைந்துள்ள ஒரே சக்தி பீடமாக இவ்வாலயம் அமைந்ததால் சக்திக்குரிய சகல விழாக்கள், பூசைகள் யாவும் வெகு சிறப்பாக நடைபெறுவதை யாவருமறிவர். இவ்வாலயம் தனியொருவரின் பரிபாலிப்பாய் இருந்தபோதும் சகல திருப்பணிகளும், ஆலயப் பணிகளும், விழாக்களும் இவ்வூர்ப் பொதுமக்களின் பங்களிப்பாக அமைந்து சிறப்பிக்கிறது.

அதிகாலை வேளையிலிருந்து அன்னை சிவகாமிக்கு அன்றலர்ந்த இனிய நறுமலர்களால் அர்ச்சிப்பதன் பேரில் ஆலய வட பகுதியில் அரியதோர் நந்தவனம் அடியார்களால் நிறுவப்பட்டு இன்றுவரை பயன் தருவது குறிப்பிடத்தக்கது.

அன்னையின் பேரால் கிடைத்த பாடல்கள்

பேரொளி காட்டிப் பக்தர்களின் இன்னல்களை நீக்கிய பேறாகப் பரவசமடைந்த பலர் அன்னை சிவகாமியைப் போற்றிப் பாடல்களாகவும் நூல்களாகவும் வெளியிட்டனர். ஆரம்ப கால தூய பக்தரான இணுவில் சின்னத்தம்பிப்புலவர் அம்பாளின் திருஊஞ்சற் பாடல், சிறைமீட்புப்படலம், சிவகாமியம் மைத் துதி, சிவகாமியம்மைத்தமிழ் போன்ற பலவற்றை ஆக்கியிருந்தார். நாட்கள் பல கடந்ததால் இவை சிதைவுறு நிலையில் இருந்தன. ஆலயத்தின் பெருமைக்குரிய ஆதார ஆவணங்களை இவ்வூர்த் தமிழவேள் இ.க.கந்தசுவாமி என்பவர் மீள்பதிப்புச் செய்து தந்துள்ளார்.

இணுவில் சிவகாமியம்மன் கீர்த்தனைகள் (இருபத்தொரு பாடல்கள்) 1980 இல் பிரம்மஸ்ரீ மகாவித்து வான் வீரமணி ஐயர் எழுதித் தந்தார். இவை சிறுநூல்களாக வெளியானது. 2003 இல் இணுவில் சைவத்திருநெறிக் கழகத்தின் வேண்டுதலுக்காக வீரமணி ஐயரால் சிவகாமி அம்பாளின் அற்புதங்களை நிரலிட்டு ஐம்பத்தொரு பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் சைவத்திருநெறிக் கழகத்தாரால் வெளியிடப்பட்ட “அறநெறிக்களஞ்சியம்” என்னும் நூலில் பதிக்கப்பட்டது. இப்பாடல்களில் சொற்சுவை, பொருட் சுவையை அறிந்த பல பெரியவர்களின் வேண்டுதலுக் கேற்ப இணுவில் சைவத் திருநெறிக்கழகத்தினரின் பெருமுயற்சியால் கனடா வாழ் இவ்வூர் து.நடராசா என்பவரின் ஆதரவில் பன்னிரு பாடல்கள் தென்னிந்தியப் பிரபல பாடகி மகாநதி சோபனாவின் குரலில் ஒலிப்பதிவு செய்த நாடா கனடாவில் வெளியிடப்பட்டது.

இப்பாடல்களின் ஒலி நாடாவை இணுவில் சைவத் திரு நெறிக்கழகத்தினர் 2004 இல் அறிமுகவிழா எடுத்தனர். இந்த ஒலிப் பதிவு நாடா இன்றுவரை தமிழ் கூறும் நல்லுல கெங்கும் அதிமதுரத் தமிழ்த் தென்ற இல்லங்கள் தோறும் கேட்டு மகிழும் சிறப்பை அன்னை சிவகாமி தந்தருளினார். இப்பாடல்களின் சிறப்பை உணர்ந்த பலரும் பாராட்டியுள்ளனர்.

நிறைவாக

இணுவில் திருவூரின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துக் காட்டும் சிவகாமி அம்பாளின் அற்புதங்களினால் சிறந்த இராசகோபுரம் ஆலயக் கட்டுமானங்கள், பூசைகள், விழாக்கள், திருவுலாவுக்கான ஊர்திகள், பல்லின நறுமணங்கமழும் அரிய மலர்களைச் சொரியும் அழகிய நந்தவனம், ஒலி, ஒளி சாதனங்கள், திருப்பாடல்கள், விழாக்காலங்கள், விரத காலங்கள் சிறப்புற அமையப் பல பணிகளாலும் சிறப்பிக்கும் தொண்டர்கள், உள்ளும் புறமும் ஆலயச் சுற்றுச் சூழல் பேணும் அடித்தொண்டர்கள் சகல ஆலயப் பணிகளையும் திரிகரண சுத்தியுடனும் சுறுசுறுப்புடனும் பெரு மகிழ்வுடனும் நிறைவேற்றும் சிரமதானத் தொண்டர்கள் ஆசாரம் பேணித் தமிழ்ப்பெண்களின் சிறப்பை அணி செய்யும் பெண் அடியார்கள், பூசைகள் அபிசேகங்களுக்கான மலர்கள், இதர பொருட்கள் மற்றும் அம்பிகையின் அழகை மெருகூட்டும் ஆடை அணிகளை அன்பளிப்பாக வாரி வழங்கும் பக்த சீலர்கள் தமது பரிபாலனத்திலுள்ள ஆலயத்தின் சகல உடமைகள், அன்பளிப்புக்களை நன்கு பராமரித்து அன்னைக்கு அலங்கரிக்கும் ஆலய பரிபாலகர் இன்றைய நடைமுறைக்கேற்ப நாள் நேரம் தவறாது தூய பணியால் ஆலயச் சிறப்பை வெளியிடும் பூசைகள் விழாக்களை நடாத்தி நேர அட்டவணைக்கு மதிப்பளிக்கும் பணியேற்ற ஆலய பிரதம குரு மற்றும் உதவிப் பூசகர்கள், மங்கல இசைக்கலைஞர்கள் மற்றும் நாளாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மெய்யடியார்கள் எனப் பல சிறப்புகளாலும் ஆலயம் சிறப்படைந்துள்ளது.

இதனால் அன்னையின் அருள் சுரக்கிறது. அறம் வளர்கிறது. இறைபக்தி மேலோங்குகின்றது. ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம் என்னும் சமத்துவ நீதி அமைந்துள்ளது. முதியோர் மட்டுமன்றி மூன்று வயதுப் பாலகர்களும் இறைவழிபாட்டை உள்ளன்போடு பேணவும் இறையின்பம் பெறவும் அன்னையின் பேரன்பு வற்றாத ஊற்றென அலைபாயும் அற்புதங்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அன்னையின் பக்தி மேலீட்டினால் வயது வேறுபாடின்றி யாவரும் உள்ளன்போடு வழிபடுவதுடன் விரத காலங்களில் ஆசார சீலர்களாக ஆலயம் வந்து அன்னையின் பேரருளைப் பெறுகின்றனர். இவர்கள் வழிபட்டு மனம் ஒரு நிலையுடன் அமைதி காண்பதுடன் சகல செல்வங்களையும் நற்பண்புகளையும் அடையும் பேற்றினையும் பெற்று மன நிறைவுடன் பிரகாசிப்பது சிவகாமி அம்பாளின் பெருங் கருணையின் சிறப்பாகும்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?