ஊர்ப் புதினங்கள்

இணுவை வரலாற்றில் மருதனார் மடமும் பல்லப்பை வைரவரும்..!

அருள்வளமும் கலைவளமும் இணைந்து இணையிலியாய் விளங்கும் பெருமைக்குரியது இணுவையூர். இவ்வூர் பண்டைப் பெருமைகொண்டது. தமிழரசர் காலத்தில் இருந்தே இவ்வூரின் வரலாற்றை அறிய முடிகின்றது. கி. பி 13-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட வரலாற்றினை அறியமுடியவில்லை.

பொதுவாக இலங்கையினதும் அதன் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தினதும் வரலாற்றில் தமிழர் வரலாறு விளக்கம் பெறவில்லை. இந்நிலையில் இணுவையூரின் வரலாற்றை அறியமுன்பு இலங்கையின் வரலாற்றையும் நோக்கியாக வேண்டியுள்ளது. இவ்வரலாற்றுப் பின்னணியிலிருந்து இணுவை வரலாற்றினை நோக்கல் சிறப்புடையது.

இலங்கையின் வடமேற்குப்பகுதியில் உள்ள சிலாப மாவட்டத்தில் உடப்பு என்ற ஊருக்குக் கிழக்கே பாயும் பற்றுளி ஓயா என்ற சிற்றாறும் இன்று தெதுறு ஓயா என்று அழைக்கப்படும் ஆறும் தமிழர் நாகரிகத் தொடர்புடையன. இதனை எண்பிப்பதற்குத் தக்க அகச் சான்றுகள் உண்டு. அகழ் ஆய்வு நிகழ்த்தின் புறச்சான்றுகளும் கிட்டும்.

பற்றுறி ஓயா என்பது பஃறுளியாற்றின் எஞ்சிய பகுதியென்று எண்ண இடமுண்டு. தெதுறு என்பது ததுற என்பதன் திரிபு எனக் கொள்ளத்தகும். பற்றுறி ஓயா என்பது 1930 ம் படம் – வரலாற்றுப் புவியியல் ஆகியவற்றில் பற்றுறி ஆறு என்றே குறிக்கப்பட்டுள்ளதனைக் காணலாம். ததுறு என்பது பல்லினைக் குறிக்கும் ஒயா என்பது ஆற்றினைக் குறிக்கும். தமிழ்ப் பஃறு சிங்களத்தில் தெதுறு என உருமாற்றம் அடைந்ததெனலாம். இதனை மொழியாய்வு தெளிவுறுத்தும்.

பஃறுளி ஆற்றின் பெயருடன் ஒருமைப்பாடுடைய தெதுறு ஓயாவின் படுக்கையினை அகழ்வாராய்வு செய்யின் தமிழர் வாழ்வின் வரலாறு விளக்கமும் தெளிவும்பெறும். ஆய்வாளர்கள் பலர் உண்மைச் செய்தியினை வெளியிடும் பல புதைபொருட்களையும் கல்வெட்டுக்களையும் அழித்து ஒழித்து விட்டனர். அழகுடைய பல புதைபொருட்களைத் தம் இல்லங்களிலமைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் பழமைமிக்க யாழ்ப்பாணத்தின் பெருமையினையோ தொன்மையினையோ நன்கு ஆராயமுடியாதுள்ளது

மணிமேகலையில் மணிபல்லவம் என்ற பெயர் யாழ்ப்பாணத்தினைக் குறிப்பதாகவே கொள்ளக் கிடக்கின்றது. வடமாநிலம் தென்னிந்தியப் பெருநிலப் பரப்புடன் தொடர்பு கொண்டிருந்தது. இதனை நில நூல் உண்மைப்படுத்தும். பஃறுளியாறும் பன்மலையடுக்கும் கடல்கொண்டதால் இலங்கையின் வடமாநிலம் தென்இந்திய நிலப்பரப்பிலிருந்து பிரிக்கப்பட்டது. இதனை நிலநூற் புலவரும் ஒப்புக் கொள்வர்.

வடபகுதியான யாழ்ப்பாணம் உண்மையில் யாழ்ப்பாடியினாற் பெயர் பெற்றதா என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். யாழ்ப்பாணம் என்ற சொல்லை மலையகத் தமிழரும், சிங்கள மக்களும் “ஏள்ப்பாணம்” என உச்சரிப்பதனை இன்றும் கேட்கலாம் மறைந்த அறிஞர் மு. கருணாநிதி கருதியது போல் ஏள்பனை நாடுதான் யாழ்ப்பாணமாக மாறியது என்பது உண்மை.

இதனைச் சான்றுப்படுத்தும் பெயர்களாக யாழ்ப்பாண மாநிலத்தில் ஏழாலை – எழுவைதீவு போன்ற இடங்கள் இன்றும் மக்கள் வாழ்விடங்களாக அமைவுற்றிருப்பதனைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊர்களில் நாக வழிபாட்டு முறையும் தேவதைகள் வழிபாட்டு முறையும் பரவலாகக் காணப்படுகின்றது. கடல்கோள்களால் அழிவுண்ட ஏழ்பனை நாட்டுக்குடிகள் – மிகுந்திருந்த தென்னிந்திய நிலப்பரபிற் சென்று குடியேறினர். பின் 13-ம் நூற்றாண்டளவில் மீண்டும் வந்து இன்றைய யாழ்ப்பாண நாட்டகத்துக் குடிகொண்டனர் எனக் கோடலே சால்புடையது.

கி.மு. 300 – இல் தொடங்கி, கி.பி. 300 வரை உள்ள ஆறு நூற்றாண்டுக் கால எல்லையில் அமைந்த தமிழகத்தின் வரலாறே சங்க கால வரலாறு ஆகும். இந்த அறுநூறு ஆண்டுக் காலத் தமிழக வரலாற்றை அறிவதற்குப் புறநானூறு போன்ற சங்கத் தமிழ் நூல்களே பெருந்துணை புரிகின்றன. கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழகக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு வந்து சென்ற பிளைனி, தாலமி ஆகியோரும், பெரிபுளுஸ் எனும் நூலின் ஆசிரியரும் எழுதி வைத்த குறிப்புகள் ஓரளவு அக்கால வரலாற்றை அறியத் துணை நிற்கின்றன.

வட மொழியில் (சமஸ்கிருதத்தில்) எழுதப்பெற்ற கௌடிலியம் எனும் சாணக்கியரின் நூலும், பிற்கால இலங்கை வரலாற்று நூல்கள் முதலியனவும் ஓரளவு அக்கால வரலாற்றை எடுத்துக் கூறுபவையாக அமைந்துள்ளன. மறைந்துபோன குமரிக்கண்டத்திலிருந்த 49 நாடுகளில் ஏனைய நாடுகளெல்லாம் அழிந்துபோக ஏழ்பனை நாட்டின் ஒருபகுதி ஒரு தீவாக மாறிய தென்றும், அதனால்தான் அத்தீவு ஈழம் என்ற பெயர் பெற்றதாகவும் வரலாற்றறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.

ஏழ்பனை நாடு என்ற பெயரே ஈழம் எனத் திரிபடைந்ததாகவும் முதலியார் இராசநாயகம் (யாழ்ப்பாணச் சரித்திரம் அதி:2) குறிப்பிடுகிறார். தென்னிந்தியாவைப் பற்றி எழுதும் கிரேக்க அறிஞர் ‘மெகஸ்தெனிஸ்’ இலங்கையை ‘தப்பிரபனே’ என்று கூறுவதுடன், அஃது இந்தியாவினின்று தாமிரபரணி என்ற பொருனை ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடற்பகுதி, அன்று நிலப்பகுதியாக இருந்த காலத்தில், அந்த நிலத்தை ஊடறுத்து இலங்கையில் உள்ள புத்தளம் வரை தமிழகத்திலுள்ள தாமிரபரணி ஆறு பாய்ந்திருக்க வேண்டும். இலங்கையில் விஜயன் வந்திறங்கியதாகக் கூறப்படும் புத்தளத்திற் கருகே உள்ள பகுதிதான் தப்ரபனே என்று பல வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள்.

விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம் தம்பபாணி என்று மகாவம்சம் கூறுகின்றது (6:47) சிந்துவெளி நாகரிகத்தின் சொந்தக்காரர்களான தமிழர்கள் முதலாம், இரண்டாம் தமிழச் சங்க காலங்களிலே தென்மதுரையும், கபாடபுரமும் உள்ளிட்ட குமரிக்கண்டத்தில் சிறப்புற்று வாழ்ந்ததை வரலாற்றுக் குறிப்புகளும், சங்க இலக்கியங்களும் சுட்டிக்காட்டி நிற்கின்றன. கடைச் சங்கம் இருந்த பாண்டி நாட்டில் நிலப்பரப்பு கி.மு. 2500 அளவில் கடல் கொள்ளப்பட்டபோது, ஈழத்தின் பெரும் பகுதியையும் கடல்கொண்டது.

‘நாக நன்னாட்டு நானூறு யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்’
எனும் மணிமேகலை வரிகள் (9:21-22) குமரிக்கண்டத்தின் கடல்கொண்ட பகுதியில் நாகநாடு இருந்தது என்பதையும், அந்த நாடு நானூறு யோசனை (ஏறத்தாழ 4000 மைல்கள்) அளவுக்கு பரந்துபட்ட பெரிய நாடாக விளங்கியது என்பதையும் உறுதிசெய்கின்றது.

சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, ஈழத்தில் நாகர்கள் சிறப்புற ஆட்சி செலுத்தி வந்ததாகவும், புத்தர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது ‘நாகதுவீபம்’ என்னும் நாகநாட்டில் நாகமன்னர் குடும்பத்தில் அரச கட்டில் தொடர்பாக எழுந்த பிணக்கைத் தீர்த்து வைத்ததாகவும் மகாவம்சம் (1:45-70) கூறுகின்றது.

இதை மணிமேகலையும்,
‘வேக வெந்திறல் நாகநாட்டரசர்
சினமாசு ஒழித்து, மனமாசு தீர்த்தாங்கு,
அறச்செவி திறந்து, மறச்செவிஅடைத்துப்
பிறவிப்பணி மருத்துவன் இருந்தறம்
உரைக்கும்’
என்ற பாடல் வரிகளின் மூலம் (9:58- 61) உறுதிசெய்கின்றது.

அந்த நாகநாடு 500 யோசனைக்குப் பரந்திருந்தது என்று மகாவம்சம் கூறு கின்றது. (1:48) புத்தர் மூன்றாவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது, கல்யாணியில் (இன்று தென்னிலங்கையில் உள்ள களனியில்) நாகர்கள் அரசு இருந்ததாகவும், அந்த நாட்டு மன்னனும் நாகத்வீப மன்னனும் உறவினர்கள் என்றும் மகாவசம்சத்திலேயே (1:63-78) கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து விஜயன் வருகைக்கு முன்னர் இலங்கைத்தீவின் வட பகுதியிலும், தென்பகுதியிலும் நாகர்கள் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது.

புத்தர் மூன்றாவது தடவை இலங்கைக்கு வந்துசென்று 37 ஆண்டுகளின் பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பதும் மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் நாகர் குடிமக்கள் சிறப்புற வாழ்ந்து, ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது ஐயத்திற்கு இடமற்றது.

சரித்திர ஆய்வாளர்கள் இமயத்தொடரிலும் பார்க்க ஆண்டால் முதிர்ந்தமலைத் தொடர்கள் தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன வென்பர். இத்தொடரில் ஒன்று இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய திருகோணமலை வரை பரந்துள்ளது. திருகோணமலைக்கும் தமிழகத்திற்கும் இடையில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் அழிந்த பஃறுளியாற்று நிலப்பரப்பின் கடைக் குறையென்றே கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண மாநிலத்தின் வடகரையில் அமைந்துள்ள கீரிமலை, காங்கேசன்துறை போன்ற கடற்பரப்புகளில் உள்ள கடற்பாறைகள் அந்நிலப்பரப்பின் தொன்மைக்குச் சான்றாய் அமைந்துள்ளன. வரலாற்றுச் சான்றுகள் போதியளவு கிடைக்காத போதும், பல அகச்சான்றுகள் கொண்டு அழிந்த குமரிக் கோடும், பஃறுளியாறு நிலப்பரப்பும், ஏழ்பனை நாடான யாழ்ப்பாணமும் குமரிநாட்டு நிலப்பரப்பாகவே இருந்தன எனலாம். குமரிநாட்டின் நிலப்பரப்புடன் ஒன்றிணைந்த பகுதியே தென்னிலங்கை.

இலங்கையின் தென் – மத்திய பகுதிகளில் வாழும் சிங்கள மக்களின் பெயர்களில், எகலப் பொல (ஏலேலப்பிள்ளை), இலச்சுமணன் இராமநாயக்கா (இராமநாயகன் ஸ்ரீ சிவன்), அப்புகாமி (அப்புச்சாமி), தம்புள்ள (தம்பிப்பிள்ளை), பண்டாரநாயக்க (பண்டு நாயகன்), சேனநாயக்கா (சேனைநாயகன்) போன்ற ஆண்பாற் பெயர்களும் -வெளிமடை, வள்ளிமடம், றம்புக்கணை. அரம்புக்கணை, வாழைத்தோட்டம், கண்டி, செங்கடகல, (செங்கோடு) கம்பளை (லை) ஆரவாரம், கழனி (வயல்) மாத்தறை, பெருந்துறை, தேவேந்திரமுனை, பாணந்துறை (பாணன் துறை) மேலும் குமரிநாட்டின் கடைக்குறையே இலங்கை யென்பதனை வலியுறுத்தும் சான்றுகள்.

யாழ்ப்பாணத்திற் ஆதிக் குடிகளிடையே பூதன், சிங்கன், இடும்பன், சூரன் போன்ற ஆண்பாற் பெயர்களும் இயக்கி, நாகி, பூதி, பேச்சி போன்ற பெண்பாற் பெயர்களும் வழக்கில் இருந்து வந்துள்ளன. இப்பெயர்கள் உள்ள மக்கள் 1945 ஆம் ஆண்டு வரை வாழ்ந்திருந்ததனை நன்கு அறியலாம். ஆயின் அவ்வழக்கு இன்று அருகிவிட்டது.

மதவாச்சி – அனுராதபுரம் போன்ற இடங்களில் வாழ்ந்த சிங்களப் பழங்குடி மக்களிடையே பூதன் சிங்கோ, கந்தன் சிங்கோ போன்ற பெயர்களும் வழக்கில் இருந்தன. இப்பெயர்கள் நாகர்களின்ஆதி இன மரபின் அடிப்படைத் தொடர்பால் ஏற்பட்டன என்பதை யாரும் மறுக்கார்.

தென்புலமிருந்து வடபுலம் பெயர்ந்த தமிழ்க் குடிகள் மீண்டும் தென்புலம் நோக்கிக் குடிபெயர்ந்த வரலாறே இலங்கையின் வரலாறு. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் இருந்து தான் யாழ்ப்பாண மாநிலத்தில் அமைந்த ஊர்களின் வரலாற்றினை நோக்கவேண்டும். வரலாற்று நோக்கில் நாம் பார்க்கும்போது குடா நாட்டின் ஊர்களின் வரலாறு 13-ம் நூற்றாண்டிலிருந்தே ஆராயவேண்டியுள்ளது.

யாழ்ப்பாடி தமிழர்களைத் தொண்டைநாடு – சோழநாடு – பாண்டி நாடு போன்ற இடங்களில் இருந்து அழைத்துவந்து யாழ்ப்பாணத்திற் குடியமர்த்தினார். அப்படி வந்து குடியமர்ந்தவர்களில் திருக்கோவலூரிலிருந்து வந்த பேராயிரவர் என்ற பெருங்குடி வேளாண் பெருமகனும் ஒருவர். இவர் தலைமையிற் காலிங்கராயர் கருணாகரர் – பரராசசேகரப்பிள்ளை – செகராசசேகரப்பிள்ளை ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவரும் இன்று இணுவில் என்றழைக்கப்படும் இணையிலியிற் குடியமர்ந்தனர். இன்றும் அவர் பரம்பரையினர் ஊரின் தொன்மையையும் தங்குடியின் தொன்மையையும் விளக்கி நிற்கின்றனர்.

தமிழரசரின் ஆட்சிக் காலத்தில் தலைமைப் பேரூர்களாக விளங்கிய பன்னிரு ஊர்களில் ஒன்றாய் விளங்கிய பெருமை இணையிலியாகிய இணுவிலுக்குண்டு. பேராயிரவனின் பின் காலிங்கராயன் தலைமைப் பொறுப்பேற்று ஒர் சிற்றரசன் போல் ஆட்சி செய்தான். காலிங்கராயனின் மகன் கையிலாயநாதன் ஆளுகையுடன் பேராற்றல் கொண்டு செயற்பட்டதால் ஊர் மக்கள் அன்னாரை வணக்கத்திற்குரியவராகப் போற்றிப் பாராட்டினர்.

அவர் “இளந்தாரி” என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவர் சித்தர்கள் பரம்பரையை நினைவுறுத்தும் வகையில் தமது வாழ்வினை யமைத்துக்கொண்டார். உடலை நீக்காமலே இயற்கைப்பேறு எய்தியவர் எனப் பாராட்டி வணங்கப்படுபவர். இவரின் குடும்பம் வாழ்ந்த வளவும் இவரினால் வெட்டப்பட்ட கிணறும் இன்றும் உள்ளன. பண்டிதர் இ. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று அங்கு வீடு அமைத்து வாழ்ந்தார் .

இளந்தாரி என்ற பெருமகனின் பெயரால் இணுவில் கிழக்கில் ஓர் ஆலயம் அமைந்துள்ளதனையும் அவர் வழிவந்தோர் அங்கு வழிபாட்டினைச் செய்வதனையும் இன்றுங் காணலாம். இணுவில் தெற்கில் பரராசசேகரப்பிள்ளை என்ற வேளாண் பெருமகனால் ஓர் விநாயகராலயம் அமைக்கப்பட்டது. அது பரராசசேகரப் பிள்ளையார் கோயில் (மடத்துவாசல்) என அழைக்கப்படுகின்றது.

இணுவில் மேற்கில் அவர் உடன்பிறந்த சகோதரரான செகராசசேகரப்பிள்ளையினால் கட்டப்பட்ட விநாயகர் ஆலயம் உண்டு. அது செகராசசேகரப் பிள்ளையார் கோயில் (பருத்தியடைப்பு) என அழைக்கப்படுகின்றது. இணுவில் கிழக்கில் உரும்பராயின் எல்லையிற் கருணாகரர் என்ற வேளாண் பெருமகனாற் கட்டப்பட்ட விநாயகர் ஆலயம் உண்டு. இவ்வாலயம் கருணாகரப் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகின்றது.

பரராசசேகரரும், செராசசேகரரும் – கருணாகரரும் ஆட்சியில் அமர்ந்த அரசமரபினர்க்கு அவையில் அமர்ந்து அறிவுரை சொல்லும் தகமை வாய்ந்த பெருமக்களாவர். இவர் பரம்பரையினர் இன்று இணுவிலில் வாழ்கின்றனர். கருணாகரப் பிள்ளையார் கோயில் கருணாகர ஐயரால் தோற்றுவிக்கப்பட்டதென்றும் அவர் பரம்பரையால் கட்டப்பட்டதென்றும் கூறுவதும் எழுதுவதும் வரலாற்றில் சேறு பூசுவதாகும்.

பூசகர்களாகக் கோயில்களைப் பேணிப் பார்ப்பதற்கு வந்தவர்களும் (பார்ப்பார்கள்) அக்கோயில்களுக்குப் பண்டுக்காவலராக வந்த பூத்தொடுத்து பூசைக்குப் பணிபுரிந்த பண்டாரங்களும் கோயிற் பணிசெய்யும் பணியாளராக இருந்தனரேயன்றிக் கோயில்களைக் கட்டுவித்த வள்ளல்களாக இருந்ததில்லை. இதனை வரலாறு உணர்த்தும்.

கருணாகரப் பிள்ளையார் கோயில் கருணாகரத் தொண்டைமானின் ஆட்சிக்குத் துணையாகவிருந்த கருணாகரர் என்ற வேளாண் பெருமகனாற் கட்டப்பட்டது. பண்டைத் தமிழரில் ஆளுங்கணத்தோராய் இருந்தோர் மன்னர் பெயர்களைத் தம் பெயர்முன் இட்டு வழங்கும் உரிமை பெற்றிந்தனர். இதனைக் கல்வெட்டுச் சான்றுகள் உண்மைப்படுத்தும்.

கருணாகரப் பிள்ளையார் கோயிலில் உள்ள கல்வெட்டுச் சிதைக்கப்பட்ட நிலையிலேயே கல்வெட்டாய்வாளரான கலாநிதி சு. இந்திரபாலா அவர்களால் ஆராயப்பட்டது. அவர் அதனைப்பற்றிக் கூறும்போது கோயிலைக் கட்டியவரின் பெயரோ ஆண்டோ தெரியவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனை மறந்த சிலர் அக்கோயில் கருணாகர ஐயரால் கட்டப்பட்டதென்ற தம் பற்றார்வ உரைக்குக் கருத்தேட முயல்கின்ற விந்தையினையுங் காண்கின்றோம்.

கருணாகரப் பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்தவரும் அதற்காக நிலத்தினை அறக்கொடை கொடுத்தவரும் கருணாகரர் என்ற வேளாண் பெருமகனே. இவர் பரம்பரையினர் இன்றும் இணுவிலில் வாழ்கின்றனர். இதனைத் தெளியவேண்டுமாயின் பழைய ஆவணங்களை (தோம்புறுதி) ஆராய வேண்டும். இதனை ஓர் தனி மனிதன் செய்ய இயலாது. வரலாற்று மன்றுகள் இதற்கு முனையின் பல உண்மைகள் வெளிவரும்.

கருணாகரத் தொண்டைமான் இணுவிலில் வாழ்ந்து உரும்பராயிலே கருணாகரப் பிள்ளையார் கோயில் அமைப்பித்தான் என்று முதலியார் இராசநாயகம் மரபுக்கதைகளின் அடிப்படையிலே கூறியுள்ளார் எனக் கலாநிதி க. இந்திரபாலா அவர்கள் கூறியதனை நாம் மறக்கவியலாது. அதனை விடுத்து வரலாற்றினைத் திரித்துக்கூற முயல்வது கற்றறிந்தார் செய்கும் அழகான செயலாகக் கொள்ள வியலாது. செய்திகூறும் ஏடுகளிலும், மலர் வெளியீடுகளிலும் வெளியிடுவதனால் அவையனைத்தும் வரலாறாக அமைந்துவிடா என்பதனையுணர வேண்டும்.

கல்வெட்டுகள் உடைக்கப்படுவதும் – அவற்றினை மறைப்பதும் தமிழ் விரோதிகள் செய்யும் செயலாக எண்ண வேண்டியிருக்க, அதனைத் தமிழர்களே குறுகிய பற்றார்வத்தால் சுயநலநோக்கால் செய்கின்ற கொடுமையினைக் காண்கின்றோம்.

அந்தோ தமிழினமே உன்நிலையிதுவோ என்று அலற வேண்டியுள்ளது. பாரதி கூறியது போல் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என உள்ளம் வெதும்ப வேண்டியுள்ளது. ஊர் வரலாறுகள். கோயில் வரலாறுகள் உண்மை நோக்குடன் ஆராயப்பட்டால் எமது இனத்தின் வரலாற்றில் பல உண்மைகளைக் காணக்கூடியதாகவிருக்கும்.

இணுவில் சைவத்தின் உறைவிடம்

சித்தர்கள் – ஞானிகள் – இன்கலைவல்ல புலவர்கள் சூழ அருட்பொலிவும் கலைப் பொழிவுங் கொண்ட வாழ்வுபெற்ற இணுவில் பேராயிரவன் ஆண்ட பேரூராய் விளங்கியது. குடாநாட்டின் உள்ளமாகச் செம்மைபூண்ட மண்வளத்தினையும் சுண்ணச் சத்துக்கொண்ட நீர்வளத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் துணை உணவுப்பொருட் செய்கைக்குச் சிறந்த இடமாக அமைந்துள்ளது.

மொழி இனப் பற்றும் அறநெறிப் பற்றும் இவ்வூரவரிடம் இருந்ததனால் வயிற்றுக் கஞ்சிக்காக மதம் மாறி – மதங் கொண்ட நிலையினைக் காணவியலாது. மொழி விடுதலை – இன விடுதலை யென்பவற்றிற்காகச் செய்த முதல் முழக்கம் இணுவிலிலிருந்தே கேட்டது என்று பெருமைப்படும் உரிமையும் இணுவிலுக்குண்டு.

இன்றைய மாறுபட்ட உறவு நிலைகளால் அந்நிலையிற் சிறிது தளர்ச்சி யேற்பட்டதனையுங் காணலாம். இந்நிலையிலிருந்து எழுச்சிபெறும் ஆற்றல் இம்மண்ணுக்குண்டு. காலம் அதனை உணர்த்தியேயாகும்.

இணுவையூர் யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பெருந்தெருவில் யாழ்நகரிலிருந்து நான்காவது கல் எல்லையில் தொடங்கி மருதனார்மடம் சந்திவரை ‘பெரிய மதவடி’ என ஊர்மக்களால் அழைக்கப்படும் இடம்வரை பரந்து பெருவீதிக்குக் கிழக்கே இராமநாதன் கல்லூரி உள்ளடங்க ஒன்றரைக்கல் தொலைவு வரை கிழக்கு நோக்கிச் சென்று வடகிழக்கு எல்லையாகக் கல்லாக் கட்டுவன் என்ற ஊர்ப்பகுதியையும் கிழக்கெல்லையாக உரும்பராயையுங் கொண்டு தென்கிழக்கெல்லையாகக் கருணாகரப் பிள்ளையார் கோயில் மூலவர் இருக்கும் இடம் உட்பட மேற்கு வீதியையும் உள்ளடக்கிக் காரைக்கால் வரையும் வளைவுடையதாக வந்து காரைக்காலின் வடக்கு வீதியுட்பட அமைவுற்றுத் தெற்கெல்லையாகக் கோண்டாவிலையும் – தென்மேற்கு எல்லையாகத் தாவடியையும் மேற்கெல்லையாகச் சுதுமலையையும் – வடமேற்கு எல்லையாக உடுவிலையும் – வடக்கெல்லையாக சுன்னாகத்தினையுங் கொண்டு அமைவுபெற்றுள்ளது.

இணுவையூரின் நிலப்பரப்பு ஏறக்குறைய 650 ஏக்கர் கொண்டதாகும். இவ்வூரின் அமைப்பினை ஓங்கார ஒலியினை யுணர்த்தி நிற்கும். “ஓ” என்ற வரிவடிவிற்கும் ஒப்பிட்டு நோக்கினால் ஓரளவு புரியும் என எண்ணுகின்றேன்.

அட்டி என்பது தடை அல்லது எல்லை என்று கொள்ளப்படும் இணுவிலின் ஊர் எல்லையில் ஆலடி இருந்தது. இந்த ஆலடியில் ஊருக்குள் நுழைபவர்களை சோதனை செய்து தாமதிக்க வைப்பார்கள். இவை யாவும் காலப் போக்கில் மருவி ஊர் +அட்டி =ஊர் எல்லை, ஆலடி =ஆலமரத்துப் பக்கத்தில், ஊர்+அட்டி+ஆலடி=ஊரட்டியாலடி என்று மாறியது.

ஊர் எல்லையில் உள்ள ஆலடிச் சோதனைசாவடி என்று பொருள் கொள்ளல் வேண்டும். இது பின்னர் உறட்டியாலடி என்று திரிபு கண்டு விட்டது
“வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” – தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநிலக் கடவுளாகக் கூறுகிறது.

மருதம் என்பது பண்டைத் தமிழரினால் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மள்ளர் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இப்படி பலதுறைகளில் இருந்து வரும் உழவர்கள் (மருதனார்கள் ) தங்குவதற்காக இணுவிலில் அமைக்கப்பட்ட தங்குமிடம் (மடம்)மருதனார்கள் மடம் என்றும் அழைக்கப்பட்டது. மேலும் இங்கு பலவிதமான அப்பை என்கின்ற கொன்றை மரங்கள் இருந்தன. இதனால் இந்த பல +அப்பை= பல்லப்பை மரங்களின் கீழே காவல் தெய்வமாக வயிரவர் இணுவிலைச் சேர்ந்த சுப்பர் காசிநாதர் என்ற வேளாண்மைக் குலத்திலே பிறந்தவரினால் அமைக்கப்பட்டார்.

இது காலப் போக்கில் பல்லப்பை வயிரவராக மாறி விட்டார். இந்த மருதனார் மடத்தில் வந்து தங்கும் உழவர்கள் அதிகாலையில் பல்லப்பை வயிரவரை வழிபட்டு விட்டே தொழிலை ஆரம்பிப்பார்கள். தாம் கொண்டு வந்த பொருட்களை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். இதுவும் பண்டமாற்று வியாபாரமாகி நாளடைவில் இங்கு சந்தையும் உருவாக்கி விட்டது. காவல் தெய்வமாக இந்த வயிரவர் இன்றும் அருள் பாலித்து வருகிறார் .

பலவிதமான அப்பை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அங்கே எண்ணெய் குதம் ஓன்று காணப்படுகிறது. பொருள் வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய இடத்தை குறிக்கும் இடமே சந்தை எனப்படும். ஆனால் உற்பத்தியாளர், இடைத்தரகர்களின், நுகர்வோரின் ஆளுமைக்கு உட்பட்டதால் தற்பொழுது சந்தை வியாபார நிலையமாக மாறியுள்ளதைக் காண முடிகிறது.

தொடரும்…

-வைத்திலிங்கம் மாணிக்கவாசகர்-

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?