பெரிய சந்நியாசியாரும் பெரு மஞ்சமும்

இணுவில் கிழக்கில் (அரசோலை) கப்பனைப் பிள்ளையாரின் ஆலயச் சூழலில்  சிவபக்தியுடன்  வாழ்ந்து  விவசாயத்தை  மேற்கொண்ட கந்தர் தெய்வானையின் இரண்டாவது மகன் சுப்பிரமணியம், தமது குடும்ப ஆநிரைகளை அழைத்துச் சென்று காரைக்காலில் மேய்த்து வந்தார். இவரின் தவப்பேறு எதிர்காலத்தில் பிரகாசிக்க வேண்டி காரைக்கால் மாரியம்பாள் நேரில் வந்து  தந்த திருவமுதால் சித்தரானார்.

தமது சித்து மகிமையால் இறை பணியாக காரைக்கால்  சிவாலயம் சிறக்கவும், சுற்றுச்சூழல் புனிதமடையவும், பொது மக்களின் நன்மைக்காக உடல், உளப்பிணி அகற்றிச் சித்தத்தை சிவன் பால் வைத்து, இறை பணியில் இரண்டறக் கலந்தார். காரைக்காலில் மட்டுமன்றி இணுவில் கந்தசுவாமி கோயிலிலும் இறைபணியாற்றினார்.

இணுவில் பெரிய சந்நியாசியார்

பெருமஞ்சப் பணி

இவரின் சிறப்பை உலகறியச் செய்யத் திருவுளங் கொண்ட முருகப்பெருமான், தமது வீதியுலாவுக்கான மஞ்சமொன்றை உருவாக்குமாறு கனவில் தெரிவித்து, அதன் மாதிரியையும் காண்பித்தார். சித்தரும் அவரது பக்தர்களும் காரைக்காலில் திருமஞ்ச அமைப்பில் ஒன்றிணைந்தனர். இவரின் பெருமுயற்சியால் மஞ்சத்துக்கான தரமான மரங்கள் தறிக்கப்பட்டு பெரியாரின் இல்லச்சூழலில் சேர்க்கப்பட்டன.

இறையருளின் நியதிப்படி ஒன்றுசேர்க்கப்பட்ட பின் பெரியாரின் உருவில் தென்னிந்திய சிற்பாச்சாரியை இணுவை கந்தப்பெருமான் சென்று அழைத்து வந்ததும் திருமஞ்சப் பணி இணுவில் கிழக்கில் 1902 இல் ஆரம்பிக்கப்பட்டது. இறையருளும் பெரியாரின் சித்து மகிமையும் அடியார்களின் பூரண ஒத்துழைப்பும் சிற்பக்கலைஞரின் கைவண்ணமும் ஒருங்கமைய திருமஞ்சப்பணி வளர்ந்தது. இறைவனின்  திருவுளப்படி கீழ்ப்பகுதி நிறைவுடன் முழுமை பெறாத திருமஞ்சக் கரு இணுவில் கந்தசுவாமி கோயிலடிக்கு உருட்டிச் செல்லப்பட்டது.

இத் திருமஞ்ச வேலை ஆரம்பிக்கப் பெற்ற இடம் ‘மஞ்சத்தடி’ என்னும் சிறப்புப் பெயரைத் தனதாக்கியது. இன்று வரை இப்பெயருடன் பிரகாசிக்கிறது. இணுவில் கந்தசுவாமி கோயிலின் தென்கீழ்  திசையிலமைந்த மருதமரத்தின் கீழ் திருமஞ்ச வேலை செய்யும் புதிய நெடியதோர் கொட்டகை அமைத்து, வேலைகள் வளர ஆரம்பித்தன. முருகப் பெருமானின் எண்ணக்கரு பெரிய சந்நியாசியாரின் சிந்தனையில் பூரண வளர்ச்சி பெற, சிற்பக்கலைஞரின் கைவண்ணம் பார் போற்றும் சித்திர கூடமாம் பெருமஞ்சமாகக் காட்சி தர 1906 தைப்பூச நன்னாளில் இக் கலைக்கோயில் வெள்ளோட்டம் கண்டது.

திருமஞ்சத்தின் சிறப்பு

இணுவில் கந்தப் பெருமானின் சித்தப்படி, பெரிய சந்நியாசியாரின் சித்து மகிமையும், இறை தத்துவங்களின் வரையறைகளும் சங்கமிக்க அரும்பெரும் கலைக்களஞ்சியமாகவே இத் திருமஞ்சம் அமைந்தது. இதன் அடித் தளத்தில் அண்ட சராசரங்கள் அனைத்தும் பல பிரிவுகளாகப் புராண இதிகாச சம்பவங்களை எடுத்துக் கூறும் தோற்றங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் கருவிலிருந்து மனிதனின் சகல படைப்புக்களையும் விபரிக்கும் காட்சிகள், இறைவனின் திருவிளையாடற் காட்சிகள், ஆறுபடை வீடுகள், அற்புதமான அழகிய வனவிலங்குகள், இனிய பறவையினங்கள்  தத்தமது மகிழ்ச்சியைத் தரும் பாவனையில் கலை வண்ணங்கள்  உயிரோவியமாகக் காட்சி தருகின்றன.

நான்கு வேதங்களையும் படைத்த பிரம்ம தேவரே, தமது நான்கு வேதங்களாகிய நான்கு குதிரைகளையும் செலுத்தும் மஞ்சத்தின் சாரதியாக அமர்ந்திருந்த கலை வடிவம் சிறப்பாக அமைந்துள்ளது. முருகப் பெருமான் அமர்ந்திருக்கும் பீடத்துக்கு மேலமைந்த விமானம் பல சித்திர வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது. முருகப்பெருமானின்  திருவிளையாடல்கள் முருகப் பெருமானைத் தரிசிக்க வந்த தேவர்கள் எம் பெருமானுக்கு மலர் தூவி மாலையிட்டு வணங்கும் காட்சிகள்,
முருகப் பெருமானின் திருவுளப்படி அவரால் நியமிக்கப்பட்ட சிற்பாசாரியாரின் உளமதிற் புகுந்து, கைகளினால் செதுக்கிய கலை வண்ணக் காட்சிகள் எமது கருத்தாலும் சொல்லாலும் கூற முடியாத அற்புதப் படைப்பாகும்.

மக்களின் துன்பமென்னும் இருளகற்றப் பகலவன் தோன்றும் வேளையைக் கூறும் வெண்ணிறச் சேவலொன்று கூவும் காட்சி யாவரையும் கவர்கிறது. அடித்தளத்திலிருந்து 39 1/2 அடி உயரமான இத் திருச்சித்திரகூடம் நாற்புறமும் 1008 சிறிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இத் திருமஞ்சம் உருளும்போது 1008 மணிகளும் ஓம் என்னும் இனிய ஓசையை எழுப்புகின்றன. அடித்தளத்திலிருந்து மேல் விமானம் கூடுதலான உயரங் கொண்டதால், திருமஞ்சம் அசையும் அழகே தனியழகாகும். எவரும் பார்த்த கண் எடுக்காமல் சதா பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் இத் திருமஞ்சத்தின் ஆரம்பகாலப் பவனியை அறிந்த உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மட்டு மன்றிச் சிற்ப வல்லுனர்கள், ஆய்வாளர்கள், வெளிநாட்டு சிற்ப சாத்திர அறிஞர்கள், உல்லாசப் பிரயாணிகள் எனப் பல்வேறு தரத்தினரும் வந்து கலையமைப்பினை நன்கு ஆராய்ந்தனர்.

திருமஞ்சத்தின் அமைப்பு முறைகள், கலைவண்ணம் யாவற்றையும் நோக்கிய சிற்பக் கலைஞர் குழு வொன்று பின் வருமாறு கூறியது. சிற்பக்கலையானது தெய்வாம்சம் நிறைந்தது. இணுவில் முருகப் பெருமான் தமக்கென வேண்டியதை நிறைவேற்றும் கலைஞரை நேரில் அழைத்து வந்து பெரியாரின் சிந்தனைக்கமையக் கலைஞனின் உள்ளத்தினை நெறிப்படுத்தியதால் இவ்வரிய சிற்பகூடம் அமைந்தது. வேறெவரும் தமது கலைஞானத்துடன் இதனைச் செய்ய முடியாது. முருகனின் திருவருளே இதனை உருவாக்கியது எனத் தமது ஆழ்ந்த அனுபவ மூலம் எடுத்துரைத்தனர்.

முதலாவது திருப்பெரு மஞ்ச பவனி

மாநிலம் போற்றும் யாழ் இணையிலியில் அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் பேரருளால், 1906 தைப் பூசப் பெருவிழாவின்போது கருகு மாலைப் பொழுதில்  பல்லாயிரக்கணக்கில் சனசமுத்திரம் ஆவலுடன் காத்திருக்க, வள்ளி தேவயானை சமேத ஆறுமுகப் பெருமான் தமது புத்தம் புதிய திருப்பெரு மஞ்சத்தில் பவனி வர
எழுந்தருளினார். ஆலயத்திலுள்ள அதியுயர் பட்டாடைகள் மற்றும் நவரத்தின மாலைகள், நறுமணங் கமழும் அன்றலர்ந்த மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகுக்கலை வண்ணத்துடன் வெளியே பவனிவரும் ஆறுமுருகப் பெருமானின் அருள் பொழியும் திருக்காட்சியாகவே காணப்பட்டது.

வேதியர்கள் வேதமந்திரம் ஓத, இன்னிசை விற்பன்னர்களும் அடியார்களும் பண்ணிசை பாட, இசை வேளாளர் தவில், நாதஸ்வரம் ஒலிக்க அகில், சாம்பிராணியின் நறும்புகை காற்றினால் அச்சூழலெங்கும் நறுமணங் கமழ, தூய பக்தர்கள் அரோகரா என ஒலித்த வண்ணம் ஆனந்தக் கண்ணீர் மல்க, அளப் பெரும் ஆனந்தக் காட்சியில் அனைவரும் மூழ்கி இன்புற்றனர். இக் காட்சியை மூவுலகிலும் காண முடியாத அரும்பெருங் காட்சியென இணுவையூர் ந. வீரமணி ஐயர் பாடியதை அறிந்தோம். ஆறுமுகப் பெருமான் தமது கன்னி மஞ்ச உலாவுக்கென அற்புதமான திருப்பெரு மஞ்சத்தில் அமர்ந்திருக்க, முன்றலில் மேசைகள் மீது அறுசுவை அன்னம், பல்லினப் பழவகை மற்றும் பூசைப் பொருட்கள் நிரை நிரையாகப்  பரவி வைத்திருக்க, நாற்புறமும் நீற்றுப் பூசணிக்காய்களைப் பலியாக வெட்டியும், இளநீர்களையும் குலை குலையாக வெட்டிச் சொரியவும் வீதிகளெல்லாம் மாவிலை தோரணங்களுடன் வாழை மரங்களையும் நிரை நிரையாக கட்டி அலங்கரித்தனர்.

முருகப் பெருமான் கனவிற் தோன்றி இட்ட பணியை ஏற்ற பெரியார் தன் பணி சிறப்பாக நிறைவடைந்த பேருவகையுடன், அரையில் முழங்காலுக்கு மேலே தொங்கும் நாலுமுழ வேட்டி மீது சால்வையால்  இறுகக் கட்டிய வண்ணம் திருப்பெரு மஞ்சத்தின் முன் காட்சி தந்தார். பெரியாரின் விரிந்த சடாமுடியும், நீண்ட வெண் தாடியும் காற்றில் அசைந்தாட சித்து மகிமையால் சித்தங் குளிர்ந்த மன நிறைவினால்  ஆனந்தக் கண்ணீர் சொரிய, அடியார்கள் பரப்பிய படையலின் நாற்புறமும் கற்பூர சோதியை ஏற்றினார். பக்தர்களால் செய்யப்பட்ட பல பணிகளையும் கண்டு பரவசமடைந்து கண்ணீர் மல்க, படையலைச் சுற்றி ஓடோடி ஆனந்தக் கூத்தாடிய வண்ணம் வட்டமாகச் சுற்றி வைக்கப்பட்ட மஞ்சத்தை இழுக்கும்  வடத்தினைத் தமது திருக்கரத்தினாற் பற்றிய வண்ணம் ‘முருகப் பெருமானுக்கு அரோகரா’ என்று பேரொலி எழுப்பிய வண்ணம் , அடியார்களனைவரையும் வடம் பிடிக்குமாறு அருட்பார்வையால் நோக்கினார்.

இப்புனித விழாவுக்காகத்தாமே முதலில் வடம் பிடித்து இழுத்துத் திருப் பெருமஞ்சத்தை அசைய வைத்தார். பக்த கோடிகள் வடம் பிடிக்கவும் தாம் அவ் வீதிகளெங்கும் ஆனந்த நடனமாடி மக்களைஆசீர்வதித்து இன்புற்றார்.

திருப்பெருமஞ்சத் திருவிழாவின் புறச் சூழல்

அவனின்றி அணுவும் அசையாது. முருகப் பெருமானின் பெருமையைக் காட்டி, எம் மதத்தின் அற்புதத்தை யாவரும் போற்றவென்றே இறையருளின் புதுமை சித்தரை உணர்ந்து செயற்பட வைத்தது. இறையருள், சித்து மகிமை, சிற்பக் கலை வல்லுனரின் படைப்பு, சிவநெறி போற்றும்  இணுவையூர் மக்களின் சமயப் பற்றுடன் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைபணிக்காக்கி மகிழும் பண்பு, யாவும் கைகூட தைப்பூசத் திருநாளில் (1906) ‘இணுவில் கந்தப் பெருமான் புத்தம் புதிய திருவலங்காரம் மிக்க திருப் பெருமஞ்சத்தில் பவனி வருகிறார்’ என்னும் செய்தி பாரின் திக்கெட்டும் பரவியது. இப் பெருமஞ்சமென்னும் திருவுருவத்தைக் காண எவர்தான் பின் நிற்பர்.

இணுவையூர் அயலூர்கள் மற்றும்  தூரத்துக் கிராம மக்களும் தத்தமது மாட்டு வண்டில்களில் (அக்காலத்தில் வேறு வாகன வசதியில்லாததால் மாட்டு வண்டில்களே போக்குவரத்துச் சாதனமாக அமைந்தது) மக்களெல்லாம் அணியணியாக வந்து கூடினர். அவர்களின் வண்டில்களை காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடச் சந்தி முதல் தாவடிச் சந்தி வரையும் பாதுகாப்புக்காக நிறுத்தியிருப்பர். மேற்கேயும் ஒரு மைல் தூரத்திற்கு மாட்டு வண்டில்கள் தரித்து நிற்கும். தென்னிந்திய தமிழகத்திலிருந்து பலர் பாய்க்கப்பல்கள் மூலம் வல்வெட்டித்துறைக்கு வந்து, அங்கிருந்து மாட்டு வண்டில் வாடகைக்கு அமர்த்தி வந்தடைவர். இவ்வாறு பல்வேறு மக்களின் சிந்தனையைக் கொள்ளை கொண்ட இணுவில் திருப்பெரு மஞ்சத்தின்  புகழ்  சொல்லில் அடங்காதது. (மேற்கூறிய விபரங்களை கந்தசுவாமி கோயிற் சூழலில் அன்று வாழ்ந்த  அ.கதிரித்தம்பி என்பவர் தான் 16 வயதுச் சிறுவனாக இருந்தபோது கண்டின்புற்ற காட்சியென தமது முதுமைக் காலத்தில் கூறி இருந்தார்.)

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?