மூத்த எழுத்தாளர் கே.எஸ்.ஆனந்தனின் நினைவஞ்சலி நிகழ்வு!
கடந்த நவம்பர்-18 ஆம் திகதி தனது 81 ஆவது வயதில் காலமான மூத்த எழுத்தாளர் இணுவையூர் கே.எஸ்.ஆனந்தனுக்கான அஞ்சலி நிகழ்வு இணுவை மக்களின் ஏற்பாட்டில் இணுவில் அறிவாலயம், அறிந்திரன் சிறுவர் சஞ்சிகையின் அனுசரணையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) முற்பகல்-10 மணி முதல் இணுவில் அறிவாலயத்தில் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவரும், இணுவில் வேரும் விழுதும் அமைப்பின் அமைப்பாளருமான பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் எழுத்தாளரின் உருவப்படத்திற்கு எழுத்தாளரின் குடும்பத்தவர்களால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கீத பூஷணம் பொன்.ஸ்ரீ வாமதேவன் பண்ணுடன் பாமாலை பாடினார். இணுவில் கலை இலக்கிய வட்ட உறுப்பினர் ந.ஞானசூரியர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து ஆசிரியர் ந.தவசோதிநாதன் “கே.எஸ்.ஆனந்தன் பற்றி” எனும் தலைப்பிலும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் “என் நினைவில் கே.எஸ்.ஆனந்தன்” எனும் தலைப்பிலும், இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசன் “எங்களூர் இலக்கிய கர்த்தா” எனும் தலைப்பிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரன் “கே.எஸ்.ஆனந்தனை நான் இப்படித் தான் பார்க்கிறேன்” எனும் தலைப்பிலும், கவிஞர் வீரா “பாராட்டுக்குரியவர் கே.எஸ்.ஆனந்தன்” எனும் தலைப்பிலும் உரையாற்றியிருந்தனர்.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் உரையாற்றிய பெருந்தகைகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் வணிகத் துறைத் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா, மூத்த சட்டத்தரணி சோ.தேவராஜா, மூத்த ஊடகவியாளர்களான கணபதி சர்வானந்தா, பாரதி ராஜநாயகம், மற்றும் மறைந்த எழுத்தாளரின் குடும்பத்தவர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகனின் உரை