ஆலயங்கள்

இணுவிலின் ஏனைய ஆலயங்கள்

அண்ணமார் கோயில்

1. அண்ணமார் கோயில்

இளந்தாரியின் மெய்க்காப்பாளராகவும் சகல பணிகளிலும் உறுதுணையாகவும் இருந்து நற்புகழீட்டிய அண்ணமார் என்பவர் இளந்தாரி உருக்கரந்தது போல் இச் சூழலிலுள்ள ஆலமரம் ஒன்றில் ஏறி உருக்கரந்தார். இதனால் இந்த மரம் அண்ணமார் ஆல் என இன்றும் வழங்கப்படுகிறது. அன்று முதல் இந்த மரத்தடியில் ஒரு கல் நட்டு வழிபாடு தொடர்கிறது. அன்று தொட்டு இச் சூழலில் வாழ்வோர் வருடா வருடம் பொங்கிப் படைத்து பகிர்ந்துண்டு வாழ்ந்து இன்புற்றனர். இன்றுவரை இவ் விடத்தில் பல்வேறு பிரிவினரும் வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஆலயத்தை வழிபடுவோர் கிருஷ்ண பக்தி மேலீட்டினால் ஆலமரத்தின் மேற்குத் திசையில் கருவறை அமைத்து வேணுகோபாலர் சிலையையும் நிறுவி வேணுகோபாலர் ஆலயமென வழிபட்டு வருகின்றனர். ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன் ஆரம்பமான வேணுகோபாலர் ஆலயத்தில் தினமும் இரு நேரப் பூசையும் பொங்கல் விழாவும் (வருடமொருமுறை) அலங்கார உற்சவமும் இறுதி இரு நாட்கள் தேர் மற்றும் தீர்த்த உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. 2012 ஐப்பசி மாதம் பல கட்டட வேலைகள் செய்து கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட இரு ஆலயங்களும் ஈழத்து நடுகல் வழிபாட்டுக்கு அமைவாகவே சிறப்படைந்தது.

2. இணுவில் கப்பனைப் பிள்ளையார் ஆலயம் (அரசோலை விநாயகர்)

இவ்வாலயம் காலத்தால் முந்தியது. அற்புதங்கள் புரியும் அருள்வளம் மிக்கது. காலத்தால் முந்தியதால் யாழ்ப்பாண ஆலயங்களின் பதிவேட்டில் இடம் பிடித்துள்ளது. இச்சூழல் தெய்வீகம் உற்பத்தியாகும் இடமெனவும் நோக்கலாம். பெரிய சந்நியாசியார் அவதரித்ததும் இச்சூழலில்தான். இப்பகுதி மக்கள் எக்காரியம் புகினும் கப்பனைப் பிள்ளையாரை நீயே துணை எனத் தொடங்கும் எக் காரியமும் அப்பன் அருளால் பிரகாசிக்கின்றது. மக்கள் வறுமையும் பிணியும் நீங்க நிம்மதியாக வாழ வகை செய்த பிள்ளையார் ஞானக் கல்வியையும் ஊக்குவித்தார்.

அக்காலத்தில் இவ்வாலய முன்றலில் திண்ணைப் பள்ளி மூலம் சிறார்களுக்கும் வாலிபர்களுக்கும் கற்றுணர்ந்த சட்டம்பியார்கள் ஓதுவித்தனர். வயதினாற் கூடியவர்களுக்கு இரவுப் பாடசாலை என்ற வகையில் நற்கல்விமான்கள் போதித்தனர். அவ்வாறு போதித்தவர்களுள் சதாசிவச்சட்டம்பியார், தா.வைத்திலிங்கச்  சட்டம்பியார் போன்றோர் உதவினர். இவ்வாலயத்தினாற் கவரப்பட்ட அறிஞரான சதாசிவச் சட்டம்பியார் கல்வியும் அறிவுரையும் போதித்ததுடன் தியானமிருந்து திருவாக்குச் சொல்லியும் மக்களுக்கு உதவினார்.

அக்காலத்தில் சிறுவர்களின் ஏடு தொடக்கும் சிறந்தமையமாக இவ்வாலயம் விளங்கியது. பக்தர்களின் பெரு முயற்சியால் ஆலயம் நன்கு பேணப்பட்டது. பிற் காலத்தில் பெரிய சந்நியாசியாரின் சமாதிக்கோயில் பரிபாலனத்துடன் இப்பிள்ளையார் ஆலயமும் இணைந்தது. இன்று ஆலயம் சிறப்பான கட்டுமானப்பணி பூசைகள் அபிஷேகங்கள் சாதாரண விழாக்கள் அலங்கார உற்சவமும் எம்பெருமானின் வீதியுலாவும் அமைந்துள்ளது.

3. விஸ்வேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்)

நூறு வருடங்களுக்கு முன் சைவக் குருக்களாகவும் சிவபூசை செய்து வழிபட்ட வே.சின்னத்தம்பி என்பவர் சமய ஆசாரம் பேணி யாவரையும் அரவணைத்தார். இவர் மீது அன்பு பாராட்டிய மக்கள் இவரைச் சைவச் சின்னப்பிள்ளை என்றும் இவ்வாலயத்தை சைவத்தார் கோயிலென்றும் அழைத்தனர். இவர் காசி யாத்திரை சென்று கங்கை நதியிலிருந்து எடுத்து வந்த சிவலிங்கத்தைத் தமது மடத்தில் நிறுவி ஆலயமாக அமைத்து வழிபட்டார். 1912 இல் இவ்வாலயம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு விஸ்வேஸ்வரர் ஆலயம் என வழங்கப்பட்டது.

இவ்வாலயச் சூழலில் வாழும் மக்கள் பொங்கல் பூசைகளும் சிறு விழாக்களும் செய்து சிறப்பாக வழிபட்டனர். காலத்துக்குக் காலம் திருப்பணிகள் மூலம் ஆலயம் சிறப்படைந்தது. 1998இல் இவ்வாலயச் சூழலில் வாழ்ந்த செ.வாமதேவன் என்பவர் பலரின் உதவியுடன் ஆலயத்தைச் சிறப்பாகக் கட்டிக்கொண்டிருந்தவேளை இவரின் கனவிற் தோன்றிய சிவனார் தமக்கொரு புனிதமான கிணறு தோண்டிப் புதுநீர் பாவனைக்குதவுமாறு கேட்டிருந்தார். அதன் பேறாக ஆலயத்தின் வடபால் புதியதோர் கிணறு தோண்டப்பட்டது. நிறைவான கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரப் பெருமானுக்கு வருடாவருடம் அலங்கார விழாக்களும் மேலும் சிவனுக்குரிய விழாக்களும் பக்தி பூர்வமாக நடைபெறுகின்றன. எம்பெருமானின் வீதியுலாவிற்கான இடப வாகனம், குதிரை வாகனம் என்பவற்றுடன் கயிலாய வாகனம், சப்பறம், தேர் ஆகியனவும் விழா உபயகாரர்களினாலும் பக்தர்களினாலும் உபயமளிக்கப்பட்டுள்ளது. இதனால் விழாக்காலத்தில் வீதியுலா சிறப்புற அமைய யாவரும் அகமகிழ்கின்றனர்.

பரமானந்தவல்லி அம்பாள் ஆலயம்

4. பரமானந்தவல்லி அம்பாள் ஆலயம்

இணுவில் மேற்கில் அமைந்த இவ்வாலயம் இவ்வூரில் சந்நாசி கந்தர் எனப்பட்ட காசிநாதர் என்பவரால் அவர்களின் கிணற்றருகே அமையப் பெற்ற குடிசையில் வைத்த அம்பாளின் வழிபாட்டிடமாகும். தமது சைவப் பாரம்பரியத்தை ஆதரிக்கும் நோக்கில் இணுவில் பெருஞ்சித்தரான பெரிய சந்நியாசியாரின் அணுகத்தொண்டராக இருந்து வழிபாட்டை ஆரம்பித்தார். இவரின் மகன் வடிவேல் என்பவர் பூசைப் பொறுப்பேற்று யோகசுவாமிகளாலும் மகாதேவ சுவாமிகளாலும் (கந்தர்மடம் வேதாந்த மடம்) வழிநடத்தப்பட்டவர்.

தமது கல்வி, ஞானம், பெற்ற இறையருள், குருவருள் ஆகியவற்றின் துணையுடன் தமது தந்தையால் வழிபாடு செய்யப்பட்ட இவ்வாலயத்தை நன்கு பிரகாசிக்க வைத்தவர். இவ்வாலயத்தின் ஒரு பகுதியைத் தவக்கூடமாக்கிச் சித்தர்கள் ஞானிகளுடன் சமயப் பணி சார்பான கருத்துக்களை முன்னெடுத்தவர். வடிவேற் சுவாமிகள் சைவமும் தமிழும் கற்கவும், ஞான அறிவு பெறவும் சமயப் பணியாற்றவும் கிளிநொச்சியில் தவநெறியை நிலைநாட்டவும் ஞான ஊற்றை வழங்கி ஆசீர்வதித்த அற்புதம் இப்பரமானந்தவல்லி அம்பாளுக்கே உரியதாகும்.

5. நடுவிளாத்தி வைரவர் ஆலயம்

இணுவில் தெற்கில் பல விளாத்தி மரங்களின் நடுவே காணப்பட்ட ஒரு சாம்பற்பிட்டியில் ஒரு கல்லை வைத்து வழிபாடு செய்தவர் வயிரவப்பிள்ளை என்னும் இறை பக்தியாளர். காலங்கள் கடந்ததும் அவ்விடத்திலிருந்த புளியமரம் தறிக்கப்பட்டதால் அக்குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரிய சந்நியாசியாரின் ஆலோசனைப்படி தற்போது இவ்வாலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஒரு வைரவர் சூலம் நாட்டி வழிபட்டனர். இதனால் வழிபட்டவர்கள் யாவரும் பல சிறப்புக்களுடன் வாழ வைரவப் பெருமான் அருள் பாலித்தார்.

இதனால் மகிழ்வடைந்த நா.சுந்தரலிங்கம் என்பவர் தமது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அவ்வாலயத்தை விசாலமாக அமைத்து நித்திய பூசைகள், அபிஷேகங்கள், அலங்கார உற்சவங்கள், இதர சமயவிழாக்களை வெகு சிறப்பாக நடாத்தி வருகின்றனர். அலங்கார உற்சவ பவனிக்கான வாகனங்கள் மற்றும் சிறப்பான தேர் யாவும் அமையப் பெற்றுள்ளன.

வீதியுலாவுக்கான உற்சவ மூர்த்திகள் யாவும் சிறப்புடன் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவ் வைரவப்பெருமானின் பேரருளால் ஆலயத்தை வழிநடத்துபவரின் சகல குடும்பத்தினரும் அச்சூழலில் வாழ்ந்து வழிபடுவோரும் சகல செல்வங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ இறையருள் கை கொடுத்துள்ளது. பூசைகள் கிரமமாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் நித்திய பூசைகள், அபிஷேகங்கள், விழாக்கள், வருடாந்த அலங்கார விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் அலங்கார உற்சவ காலங்களில் வைரவப்பெருமான் வெளி வீதியுலா வந்து அருள் பாலிக்கின்றார்.

6. இணுவில் தெற்கு கௌரி அம்மன் கோயில்

இணுவில் மக்களின் சைவ சமய பக்தி அவர்களின் வாழ்க்கை நெறியிலும் இன்று வரை பிரதிபலிக்கிறது. இணுவில் தெற்கில் வாழ்ந்த முதலியார் என்பவர் தமது மூதாதையர் வழிபட்டு வந்த வைரவரின் பேரில் ஒரு நிலத்தை எழுதி வைத்தார். அவரின் உறவினரான மயில்வாகனம் ஒரு குடிசையமைத்து இரு சிலைகளை 1950இல் நிறுவி வழிபட்டார். இவை அம்பாளாகவும் வைரவராகவும் வழிபட்டனர். இவ்வாலயம் புனரமைக்க நேர்ந்தபோது ஒன்று ஐயனார் சிலை என அறிந்து புதிய அம்பாள் சிலையையும் விநாயகர், முருகன் போன்ற சிலைகளையும் நிறுவி 1993இல் குடமுழுக்குச் செய்தனர்.

தொடர்ந்து அம்பாளுக்கு நித்திய பூசைகளுடன் வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் அலங்கார உற்சவமும் இதர விழாக்களும் நடைபெறுகின்றன. ஆலயப் பணியில் மு.குமாரசுவாமி என்பவரின் பெரு முயற்சியால் ஆலயம் கட்டங்கள், மணிக் கோபுரம் நிறுவப்பட்டு வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெறுகிறது. கூடுதலான அடியார்கள் வழிபட்டு இன்பமடைகின்றனர். அண்மையில் இவ்வாலயத்தின் சூழலில் வாழும் கலாபூஷணம் பண்டிதை திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை என்பவர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எமதூரைச் சேர்ந்த த.தயாபரத்தின் உதவியுடன் இறுவட்டாக வெளியிட்டது. இப் பாடல்களைப் பாடியவர் இணுவையூர் பண்டிதர் கா.செ.நடராசாவின் மகள் திருமதி கார்த்திகாயினி கதிர்காமநாதன் என்னும் பாடகியாவார்.

7. கண்ணகா பரமேஸ்வரி ஆலயம்

இவ்வாலயம் இணுவில் மேற்கு வட்டுவினிக் குறுச்சியில் வாழ்ந்த செல்லப்பா என்பவரால் நிறுவிப் பூசிக்கப் பெற்றது. இவ்வாலயத்தில் கண்ணகி அம்பாளை மூலமூர்த்தியாக வைத்தே வழிபடுகின்றனர். இன்று இந்து ஆலயங்களிலெல்லாம் கும்பாபிஷேகங்கள் மற்றும் ஆலய விதிமுறைகளில் சிறப்பு அனுபவம் பெற்ற தா.மகாதேவக் குருக்களே பிரதம சிவாச்சாரியாராக பூசை விழாக்களை நடாத்தி வந்திருக்கின்றார். 1985இல் இவ்வாலயம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுப் புதுப் பொலிவுடனும் அருளுடனும் விளங்குகிறது.

பிரதம குருவின் சிறப்பினால் சகல விழாக்களும் நடைபெறும் புனித தலமாகவே விளங்குகிறது. சமஸ்கிருதக் கல்வியறிவால் மேம்பட்ட மகாதேவக்குருக்கள் தமது கல்வி மற்றும் ஆலய விதிமுறைகளை ஏனைய அந்தணச் சிறார்களுக்கும் போதித்து நெறிப்படுத்துவதன் பேரில் ‘தர்ம சாஸ்தா குருகுலம்’ ஒன்றை நிறுவி போதனை செய்து வந்தார். இக்குருகுலத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்து பல அந்தணச் சிறார்கள் குரு குலக்கல்வி மூலம் கற்று சிறந்து விளங்குகின்றனர். மகாதேவக் குருக்களின் அருஞ்சேவையால் நாட்டில் இந்து ஆலய விதிமுறைகளும் நன்கு பேணப்படுகிறது. இதனால் இவ்வாலயத்திற்கும் இணுவை மண்ணுக்கும் பெருமை ஏற்பட்டது.

இணுவில் பல்லப்பை பைரவர் ஆலயம்

8. இணுவில் பல்லப்பை பைரவர் ஆலயம்

இவ்வாலயம் இணுவில் மருதனார்மடத்தின் தென்கீழ் திசையில் மேற்கு நோக்கி அமைந்து அருள் பாலிக்கிறது. ஆரம்பத்தில் இவ்வூரைச் சேர்ந்த காசிநாதர் என்பவர் ஒரு பைரவர் ஆலயத்தைத் தமது பல்லியாப்புலம் என்னும் காணியில் நிறுவி வழிபட்டார். தற்போது உடுவில் மகளிர் கல்லூரி அமைந்துள்ள இடம் பெரிய தரிசு நிலமாக இருந்தபோது இக்காணியின் பல்லப்பை என்னும் சிறுபிரிவு தென்பட்டது. இப்பல்லப்பை என்னும் காணியில் ஒரு பைரவரும் ஒரு அம்பாளும் சிறு கோயிலில் அமைந்து அவ்வூர் மக்களின் வழிபாட்டுக்கு உதவியது.

இக்காணியினை உடுவில் மகளிர் கல்லூரி அமைக்கவென விலைக்கு வாங்கியவர்களால் அவ்வாலயம் அகற்றப்பட்டது. பைரவர் சூலம் பல்லியாபுலம் பைரவரின் ஆலயத்தில் நிறுவப்பட்டது. இதனால் இவ்வாலயம் பல்லப்பை பைரவர் கோயிலென்றே அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தை காசிநாதரும் அவரின் சந்ததியினருமே பராமரித்து வந்தனர். இவ்வாலயத்தின் சிறப்பை நோக்கி இணுவில் வடக்கைச் சேர்ந்த அப்பாத்துரை என்பவரிடம் கையளித்தனர். அப்பாத்துரை தமது அயராத பெருமுயற்சியால் நிதி சேகரித்துச் சிறந்த ஆலயமாகக் கட்டினார். பொது மக்களின் ஆதரவி னால் ஆலயத் திருப்பணிகளும் விழாக்களும் சிறப்படைகிறது.

இணுவில் மருதனார்மடம் சந்தையில் காவற் தெய்வமாக அமைந்ததால் சந்தைக்கு வரும் பொது மக்கள் அப்பாதையாற் செல்லும் பிரயாணிகள் பெருமளவு ஆதரவு தருவதால் வருடா வருடம் ஆலயப் பணி மேலோங்குகிறது. இப்பைரவர் மிகுந்த அருளாட்சியுடன் அமைந்ததால் பெரிய ஞானிகள், அருளாளர்கள் தரிசிக்கும் ஆலயமாக விளங்குவது பெருமையாகும்.

இணுவில் கிழக்கு மாணிக்க பைரவர் உடனுறையும் பத்திரகாளி அம்மன் ஆலயம்

9. இணுவில் கிழக்கு மாணிக்க பைரவர் உடனுறையும் பத்திரகாளி அம்மன் ஆலயம்

இவ்வாலயம் மிகவும் அற்புதமானது. அன்று அரசாண்ட தமிழ் மன்னன் காலிங்கராயனினால் நிறுவப்பட்டுக் காவல் தெய்வமாக வழிபாடு செய்யப்பட்டு அருள் பாலிக்கிறது. சிவகாமி அம்பாளைத் தரிசிக்க வரும் பக்தர் இவ்வாலய பைரவரையும் பத்திரகாளி அம்பாளையும் உள்ளன் போடு வழிபட்டு வேண்டிய பலனை அடைகின்றனர். இவ்வாலயம் தனியார் பராமரிப்பில் இருந்தபோதும் இவ்வூரில் ஆலயப் பணியையே பேறாக எண்ணி இவ்வாலய வாசலிலிருந்து திருவாக்குச் சொல்லி வந்த சாத்திரம்மா தமது பணியை நாற்பது வருட காலம் சிறப்பாக அமைந்ததால் இவ்வாலயத்தை வெள்ளை வைரக் கற்களால் வடிவமைத்து சிறப்பான ஆலயமாக்க எண்ணினார்.

தமது பெருமுயற்சியால் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்தை அழகுற அமைத்து கும்பாபிஷேகமும் செய்வித்தார். மேலும் சாத்திரம்மாவின் ஆலயத் திருப்பணிச்சிறப்புடன் ஆலய நெய்வேத்தியம் வைப்பதற்கான மடைப்பள்ளியையும் அமைத்துக் கொடுத்தார். இங்கு உறைந்துள்ள பத்திரகாளி அம்மன் கருணை மிக்கவர். எம்மக்களின் குறைகளையும் நிவர்த்தி செய்துள்ளார். மக்களும் பிரதி உபகாரமாக பொங்கல் பூசைகள், விழாக்கள் செய்து மன நிறைவடைகின்றனர். வருடத்தில் இருமுறை அலங்கார உற்சவமும் பைரவப் பெருமானின் வீதியுலாவும் சிறப்பாக அமைந்துள்ளது.

2012 இல் ஆலயத்திற் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டுக் கும்பாபிசேகமும் தொடர்ந்து மண்டலாபிசேகமும் நடை பெற்றன. வயிரவப் பெருமானின் முன் மண்டபமும் முகப்பும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்திரகாளி அம்மனின் வாசல் (தெற்கில்) சிறப்பான பண்டிகை வேலைகள் மிக அழகுடன் செய்யப்பட்டுள்ளது. பத்திரகாளி அம்மனுக்கு நேர்த்தி செய்பவர்கள் அசைவ உணவு தயாரிக்கவென நெடிய தோர் கொட்டகையும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அசைவ உணவு படைப்பதற்காக பத்திரகாளியின் வடதிசையில் படைக்கும் பீடமும் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

10. கொட்டம்பனை பைரவர் கோயில்

இணுவில் கோண்டாவில் ஊரெல்லையில் அமைந்துள்ள இவ்வாலயம் இணுவில் பொதுமக்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை மாலை இரு நேரப் பூசையும் இதர சமய விழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் பன்னிரு நாட்கள் அலங்கார உற்சவமும் மாலைத் திருவிழாவில் பைரவப் பெருமான் நாய், குதிரை போன்ற வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களை உய்விக்கிறார். இவ்விழாக் காலம் பன்னிரு நாளும் மதிய வேளை அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகிறது. இதனால் நாளாந்தம் நடைபெறும் பூசைகளை மக்கள் கூடி வந்து பக்தி சிரத்தையுடன் வழிபட்டுச் செல்கின்றனர். இவ்வாலயத்தில் இதர விசேட காலங்களுக்கேற்ற விழாக்களும் பொங்கலும் வெகு சிறப்பாக நடை பெறுகின்றன.

11. நரசிம்ம வைரவர் கோயில் 

ஏறக்குறைய நூற்றைம்பது வருடங்களுக்கு முன் இணுவில் தெற்கைச் சேர்ந்த இராமுப்பிள்ளை என்பவரின் கனவிற் தோன்றிய வைரவப் பெருமான் ஒரு குறிப்பிட்ட புளிய மரத்தடியில் வசிப்பதாகவும் தமக்குப் பத்துப் பானையில் பொங்கலிட்டு வழிபட்டால் வேண்டிய யாவும் கிடைக்கச் செய்யலா மென உணர்த்தினார். அதனைத் தொடர்ந்து இராமுப்பிள்ளை அப்புளிய மரத்தடியில் குடிசையமைத்து பொங்கலிட்டு வணங்கினார். அச்சூழலில் வாழ்ந்த யாவரும் வழிபாட்டின் பேறாக நல்வாழ்வு வாழ்ந்தனர்.

அயலவர்களும் ஆலய வளர்ச்சிக்காக நிலமாகவும் பொருளாகவும் செய்த அன்பளிப்பால் ஆலயம் முன்னேறியது. ஆலய பூசை வழிபாட்டை வீர சைவர் மரபினர் செய்கின்றனர். 1991இல் நரசிங்கபைரவர் சிலையும் 1992இல் பூமிலக்குமி, மகாலக்குமி சமேத மகா விஷ்ணு சிலைகளும் நிறுவப்பட்டு அந்தணச் சிவாச்சாரியார்களால் பூசைகள் விழாக்கள் நடாத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் வாழும் யாவரும் இறையருளால் நல்ல நிலையில் வாழத் திருவருள் புரிந்த நரசிங்க வைரவப் பெருமானை யாவரும் உள்ளன்போடு வழிபட்டு வருகின்றனர். வருடா வருடம் அலங்கார உற்சவங்களும் நடைபெறுகின்றன.

12. வட்டுவினி விநாயகர் ஆலயம்

இணுவில் மேற்கு வட்டுவினி என்னும் குறிச்சியில் வாழ்ந்த வெள்ளைக் கதிர்காமர் என்பவர் தமது சொந்தக் காணியில் வழிபடுவதன் பேரில் ஒரு விநாயகரைத் தாபித்து வழிபட்டு வந்தார். இவ்வாலயத்தில் அயலிலுள்ள பொதுமக்களும் வழிபட்டனர். இதனால் ஆலயம் வளர்ச்சியடைந்தது. கதிர்காமரைத் தொடர்ந்து அவரின் சந்ததியினர் இவ்வாலயத்தைப் பராமரித்து வருகின்றனர்.

இங்கு பத்து நாட்கள் அலங்கார உற்சவமும் விநாயகர் சதுர்த்தியும் விழாவாக அமைந்துள்ளன. மேலும் திருவெம்பாவை, பிள்ளையார் கதை, விழாக்காலமும் பக்திசிரத்தையுடன் நடைபெறுவது சிறப்பாகும். இங்கு காலை மாலையென இரு நேரப் பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இவற்றினை விடவும் இணுவிலில் பல சிறு ஆலயங்கள் குலதெய்வ கோவில்களும் நிறைந்து இருக்கின்றன.

இணுவில் திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம்

13. இணுவில் திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம்

இணுவில் திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயமானது 2004 ஆம் ஆண்டு சண்முகராஜா கணேசலிங்கம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று பெருவாலயமாக வளர்ந்து வெங்கடேஸ்வரப் பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கின்றார். இவ் ஆலயத்தில் ஏகாதாசி விரதநாட்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறுவதுடன் பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதாசி விரதம், புரட்டாசி சனி விரதம் மற்றும் இவ்வாலய வருடார்ந்த பெருவிழா போன்றன இசைக் கச்சேரிகளுடன் பெருவளவான மக்கள் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இணுவில் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில்

14. இணுவில் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோவில்

இத்திருத்தலம் ஆரம்பித்த தமிழரசர்கள் இணுவிலிலும் சில கோவில்கள் அமைத்தபோது அரசனும் பரிவாரங்களும் இவ்வெல்லாக் கோவில்களையும் வழிபட்டுவந்தனர். அரசர்கள் மாறினாலும் ஊர் மக்கள் வாழையடி வாழையாக வழிபட்டே வந்தனர். ஆரம்பகாலம் தொட்டே இத்திருக்கோவிலில் உற்சவங்கள், பூசைகள், திருப்பணி நிதி பங்களிப்பு ஆகிய நற்கருமங்களில் எமதூர் மக்கள் பங்குபற்றத் தவறவில்லை. யுத்தகால நெருக்கடியும் பஞ்சகால நெருக்கடியும் இடை நின்றதால் பெருவிழாக்கள் செய்ய முன்வராததால் விழாச் செய்யும் நியதிகளும் மாறிவிட்டன.

4 ஆண்டுகளுக்கு முன் கருணாகரப் பிள்ளையார் கோவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகச் செலவுகளுக்கு உரும்பிராய் வாசிகளிலும் கூடுதலான பெருநிதியை இணுவில்வாசிகள் வழங்கியுள்ளனர் என்ற சிறப்பான செய்தியைக் கும்பாபிஷேக விழா இறுதியில் முன்னின்று செயற்பட்ட ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள் பெருமையுடன் கூறி உண்மையை வெளிப்படுத்தினார்.

இக்கோவிலைச் சூழ்ந்துள்ள விவசாயிகள் சகல விழாக்களிலும், நாளாந்தப் பூசை நேரங்களிலும் பங்குபற்றத் தவறுதில்லை. கருணாகரப்பிள்ளையாரின் அருளினால் இணுவில்வாசிகள் பலர் நற்பேறு பெற்றுள்ளனர்.

15. இணுவில் உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவில்

இத்திருக்கோவில் பௌதீக அமைப்பில் உடுவில் கிராமத்துடன் சேர்க்கப்பட்டாலும் இணுவில் மேற்குடன் பின்னிப்பிணைந்து எல்லை பிரிக்காத நிலையில் உள்ளது. இத்திருக்கோவிலின் பரிபாலகர் முதல் வழிபடுவோர் வரை இணுவில் வாசிகளும் உளர். சகல திருப்பணிகள், தொண்டுகள் யாவும் இணுவில்வாசிகளின் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

பல சிறப்புகளும், புதுமையும் நிறைந்த கற்பகப் பிள்ளையார் கோயிலில் சித்திரத்தேர், சிறப்பான வாகனங்கள் இருப்பதுடன் பூசைகள் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பல சிறப்புக்களும் புதுமையும் நிறைந்த கற்பகப் பிள்ளையார் கோவிலில் சித்திரத் தேர் சிறப்பான வாகனங்கள் இருப்பதுடன் பூசைகள் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. வருடாந்த மகோற்சவங்கள் ஆடிப் பூரணையில் தீர்த்தத் திருவிழா அமையும் 11 திருவிழாக்கள் சிறப்புடன் நடைபெறுகின்றன. கற்பகப் பிள்ளையாரின் பேரருளால் எம்மூரவர்களில் பலர் பெரும் பேறு பெறுகின்றனர்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?