ஊர்ப் புதினங்கள்

யாழ்ப்பாணத்தின் வரலாற்று ஊர் இணுவில்!

உலக வரலாற்றில் இடம் பெற்றதும், பலரால் அறியப்பட்டதும், திருமூலநாயனாரால் சிவபூமி என அழைக்கப்பட்டதுமான இலங்கைத் தீவின் வடபாகத்தில் அமைந்து தமிழும் சைவமும் தழைத்தோங்கி இருப்பது யாழ்ப்பாணக் குடா நாடாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து, காங்கேசன்துறை வீதியில், நான்காவது கிலோமீற்றர் தொலைவில், இருமருங்கும் விளைநிலங்கள் விளங்கும் பசுமையான சூழலில், சுன்னாகம் கிராமத்தின் தெற்கு எல்லையாக அமைந்த இணுவில் வடகிழக்கு வாழ்வகம் வரை பரந்து பல ஞானிகளும், சித்தர்களும், பேரறிஞர்களும், கலை விற்பன்னர்களும், ஆசிரியர்களும் வாழ்ந்ததும், வாழ்ந்து கொண்டிருப்பதுமான செம்மண் செறிந்த நிலைப்பகுதியே இணுவில் கிராமமாகும்.

செந்தமிழும் சிவநெறியும் செழித்து வாழும் இவ்வூர், கிழக்கே உரும்பிராயையும், வடக்கே சுன்னாகத்தையும், தென் கிழக்கே கோண்டாவிலினையும், தெற்கே தாவடியையும், மேற்கே சுதுமலையையும், வடமேற்கே உடுவிலினையும் எல்லையாக கொண்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில், யாழ்ப்பாணத்து அரசின் தொடக்ககாலத்தில் அதன் ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக இருந்தது எனவும், இப்பிரிவுக்கு ஆட்சித்தலைவர் ஒருவர் இருந்தார் எனவும், அக்காலத்தில் இவ்வூர் பல்வளமும் நிறைந்து பரந்த நிலப்பரப்பினதாக விளங்கியதெனவும், யாழ்ப்பாணத்து வரலாற்று மூலங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சில அரசியல் பின்னணியின் காரணமாக அக்காலத்தில் பரந்து, விரிந்து காணப்பட்ட இக்கிராமத்தின் எல்லைகள் சுற்றுப்புறக் கிராமங்களின் விஸ்தரிப்பினால் சூறையாடப்பட்டு பரப்பளவில் குறைந்து வருவது மிகவும் வேதனைக்குரியவிடயமே!

இணுவில் கிராமத்தின் வரலாற்றை நோக்கும் போது, தொண்டை நாட்டில் இருந்து வந்து, யாழ் வாசித்துக் கவிபாடி யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற  வீரராகவன் என்பவன் தமிழ்நாட்டில் இருந்து ஏழு குடிகளைக் கொண்டு வந்து இணுவில் கிராமத்தில் குடியமர்த்தினான் என்று வரலாறு கூறுகிறது.

“இணுவில் என்பது இணையில் என்று பொருள்படும். இணையில்லாத பல சிறப்புகளைக் கொண்டதனால் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும். வில் என்றால் குளம் என்று சிங்கள மொழி கூறுகிறது. ஒரு காலத்தில் இரண்டு குளங்கள் இங்கே இருந்துள்ளன. இரு என்பது இணுவாக மருவி, இரு குளங்கள் இணுவிலாகவும் மாறியிருக்கலாம்.

யாழ்ப்பாண இராச்சியத்தை 1215 தொடக்கம் 1619 வரை சேர்ந்த 19 மன்னர்கள் அரசு புரிந்தார்கள். இவர்களுள் மாமன்னன் பரராசசேகரனும் அவனுடைய சகோதரனாகிய செகராசசேகரனும் ஆட்சி செய்த போது யாழ்ப்பாணத்தமிழ் இராச்சியம் மிகவும் சிறப்பாக இருந்தது. இயற்கை வளமும் மக்கள் வளமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்திருந்தன. இவர்கள் அரசு கட்டிலேறிய காலத்திலிருந்து யாழ்ப்பாண அரசின் நலனைக் காப்பதில் மிகத் தீவிரமாக இருந்து வந்தார்கள்.

தமிழில் புலமை பெற்ற மாமன்னன் பரராசசேகரனும் செகராசசேகரனும் தமிழை வளர்க்கும் பொருட்டு, முதலாவது யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்தை நிறுவினர். மேலும் ஊர்கள் தோறும் பாடசாலைகளை உருவாக்கி, கல்வியறிவைப் பரப்பினர். நல்லூரில் அமைத்த தமிழ்ச்சங்கத்தில் சோழ, பாண்டி, தொண்டை மண்டலங்களினின்றும் வரவழைத்த பண்டிதர்களோடு, ஈழநாட்டிலுள்ள புலவர்களும் அடங்கியிருந்து, தமிழின் சிறப்பையயும் அதன் தொண்மையையும் ஆராய்ந்ததோடு, மக்களிடையே தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் செய்யுள்கள் போன்றவற்றை வளர்த்து வந்தனர்.

செகராசசேகரன் “செகராசசேகரம்” என்னும் சோதிட நூலை விருத்தப்பாவாக எழுதியதோடு. “பரராசசேகரம்” என்னும் ஒரு வைத்திய நூலையும் தனது தமையனாகிய பரராசசேகரன் பெயரில் இயற்றுவித்தான். “பரராசசேகரம்”என்ற வைத்திய நூல், “செகராசசேகரம்”என்ற சோதிடநூல், “இரகுவம்சம்” என்ற காவிய நூல் என்பன பரராசசேகரன் காலத்தில் இயற்றப்பட்டவை என எமது வரலாற்று நூலான “யாழ்ப்பாணவைபவமாலை” என்ற நூலின் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.

பரராசசேகரனின் மருமகனாகிய அரசகேசரி என்பான், காளிதாசனின் இரகுவம்சம் என்ற வடமொழி நூலைத் தமிழில் பாடல்களாக்கி நூலாக்கினான். அந்த நூலைத் திருவாதவூருக்குக் கொண்டு போய் அங்குள்ள தமிழறிஞர் சபையிலே அரங்கேற்றினான். யாழ்ப்பாண இராச்சியத்தில் அங்குமிங்கும் பல அறிஞர்கள் ஒருவர் பின்னொருவராகத் தோன்றினர். செகராசசேகரன் பின்னும் பாண்டிநாட்டிலும், மற்றைய ஆதினங்களிலுமிருந்து பல சாஸ்திரநூல்களை எடுப்பித்துச் சேதுக்கரையிலிருந்து எழுதுவோர்க்குப் படிகட்டி எழுதுவித்துக் கொண்டு வந்து அந்நூல்களை இந்நாட்டிலே அதிகமாய் விருத்தியாக்கினான்.

இவற்றால் யாழ்ப்பாண இராச்சியத்தில் கல்வி விருத்தியடைந்தது. இவ்வாறு பரராசசேகரனும் செகராசசேகரனும் வளர்த்த கல்வியறிவு, ஆத்மீகம், சோதிடம் மற்றும் ஆயுள்வேத வைத்தியம் போன்றவற்றின் தாக்கங்களே இன்றும் எமது இணுவில் மண்ணில் அன்று தொட்டு கல்வி, சோதிடம், நாட்டு வைத்தியம், ஆன்மிகம், கலை, கவிதை போன்றவை மிகவும் பரவலாகச் செழித்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

பரராசசேகர அரசன் தனது யாழ்ப்பாண இராச்சியத்தை முப்பத்திரண்டு கிராமங்களாகப் பிரித்து அப்பகுதிகளை நிர்வாகம் செய்ய முப்பத்திரண்டு தலைமையதிகாரிகளையும் நியமித்தான். தனிநாயகன் என்பவனை நெடுந்தீவிலும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவராயனை, பல்லவராயன்கட்டிலும், மண்ணாடுகொண்ட முதலியை இருபாலையிலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த கனகராயனைத் தெல்லிப்பளையிலும், காவிரியூரைச் சேர்ந்த நரசிங்கதேவனை மயிலிட்டியிலும், நியமித்து அங்கு மக்களையும் குடியேற்றினான். அதே போல திருக்கோவிலூரைச் சேர்த்த பேராயிரமுடையான் என்பவனை இணுவிலின் ஆட்சியாளனாக நியமித்தான்.

இதனை “கோட்டு மேழித்துவசன் கோவற்பதிவாசன்
சூட்டு மலர்க்காவிற் றொடைவாசன் – நாட்டமுறு
ஆதிக்க வேளாளன் ஆயுங்கலை அனைத்தும்
சாதித்த ரூபா சௌந்தரியன் – ஆதித்தன்
ஆறாயிரங்கதிரோடொத்த மேனிப்பிரகாசன்
பேராயிரவனெனும் பேரரசைச் – சீராரும்
கன்னல் வெறிவாழை கமுகுபுடைசூழக் கழனி
துன்னும் இணுவிலிற்துளங்கவைத்து
(கைலாயமாலைஅடி 170-175)

கோவலூர் வேளாளனும் மேழிக்கொடியனும் குவளைமாலையும் பெரும் பராக்கிரமமும் கல்வியும் கட்டழகும் உடையவனும் ஆகிய பேராயிரவனைக் கரும்பும் கமுகும் வாழையும் நெல்லும் செழித்து ஓங்கும் வளமுடைய இணுவில் என வழங்கும் இணையிலியிற் குடியிருத்தினான்
(யாழ்ப்பாணச்சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை)

இதே செய்திகளை யாழ்ப்பாண வைபவமாலை, முதலியார் செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் முதலிய நூல்களும் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்துப் பரராசசேகரமன்னன் இவ்வூரில் இருந்து அரசு செய்தான் எனப் பஞ்சவன்னத்தூது நூலில் உள்ள அகவல் தெரிவிக்கின்றது.
“அட்டலட்சுமியுறைந்தருளும் யாழ்ப்பாணப்
பட்டினந்தன்னிற் பரராசசேகரனெனும்
ஆரியகுலத்திறை அரசு வீற்றிருந்த
தென்னிணுவை யெனுந்திருநகர்”
(அகவல்அடி 17-20)

இவ்வூரின் கண்ணே அமைந்திருக்கின்ற பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்தை இம்மன்னனே அமைத்தான் என செவிவழிச் செய்திகள் சொல்லும்.

மேலும் பரராசசேகரனின் சகோதரன் செகராசசேகர மன்னனால் இணுவிலின் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டு வழிபடப்பட்டு வருவதே இணுவில் செகராசசேகர பிள்ளையார் ஆலயம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தைப் பருத்தி அடைப்புப் பிள்ளையார் என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. ஆலயத்தைச் சுற்றி பருத்திப்பயிர் செய்யப்பட்ட காரணத்தால் இப்படி அழைக்கப்படுகின்றது என்கிறார்கள். இதே போல யாழ்ப்பாணத்தில் பருத்திப்பயிர்ச் செய்கை இருந்ததனால் பல குறிச்சிகள் இன்றும் இப்படி அழைக்கப்படுகின்றன. இணுவிலில் இருந்த இரண்டு குளங்களில் இருந்து பருத்திப் பயிர்செய்கைக்கு நீர்பாய்ச்சியதற்கு சாட்சியாக இங்கு மதகு காணப்படுகிறது.

முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் இலங்கை வந்தபோது இவ்வூரிற்காரைக்காற் பகுதியில் தங்கியிருந்தான் என முதலியார் இராசநாயகம் தமது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் எழுதியுள்ளார். (பக்கம் 38-39) இவ்வூர்த் தொடக்க ஆட்சியாளன் பேராயிரவன் திருக்கோவலூரைச் சேர்ந்தவன். இவனுடைய காலத்தின் பின்னர் இவ்வூர் ஆட்சித் தலைவனாயிருந்தவன் காலிங்கராயன். இவன் காரைக்கால் ஊரினன் என்பதைப் பஞ்சவன்னத்தூது நூல் “பேராயிரவன் குடிப்பேரதிகாரி”, “காரைநாடான்”, “காரைப்பதிவாசன்” எனக் கூறுதலால் அறியக் கூடியதாக இருக்கிறது. தொண்டை நாட்டு ஊர்ப் பெயர்களோடு கூடிய குடியேற்றங்கள் காரைக்கால் – காரைக்காடு (இணுவில்) எனத் திருமுத்துக்குமாரசாமிப்பிள்ளை தமது யாழ்ப்பாணக் குடியேற்றம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 4).

பரராசசேகரனும் செகராராசனும் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியால் ஏற்பட்ட கல்வியானது யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் சிறப்பாக மிளிர்ந்தது எனக் கூறலாம். அதுவும் பேராயிரவன் தலைமையில் இருந்த இணுவிலிலும் கல்வி சிறப்பாக வளர்ந்தது என்பதற்கு இன்று இணுவிலில் அன்றும் இன்றும் பெருமளவில் உள்ள கல்விமான்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் போன்றவர்களே சாட்சியாக விளங்குகிறார்கள்.

பேராயிரவனே சிதம்பரத்தில் இருந்து சிவகாமியம்மை திருவுருவத்தை இங்கு கொண்டு வந்து இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தைக் கட்டுவித்தான் என்றும் அதனால் அந்த இடத்தை “சிதம்பரவளவு” என அழைப்பதாகவும் நூல்கள் கூறுகின்றன.

பேரயிரவன் வழி வந்த காலிங்கராயன் அன்னை சிவகாமியின் பக்தனாகவும் ஆலயத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தான். காலிங்கராயனின் மகனான கைலாயநாதன் தொடர்ந்து அன்னை சிவகாமியின் மீது அளவிலாப் பக்தி கொண்டு அவள் அருளைப் பெற்றிருந்தான்.

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இணுவிலுக்கான பிரதி நிதியாகக் காலிங்கராயன் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
காலிங்கராயனுக்குப் பின்னர் கைலாயநாதன் ஆட்சியாளன் ஆனான். இவனது மாளிகை சிவகாமி அம்மன் ஆலயத்திற்குத் தெற்குப்புறமாக அமைந்திருந்தது என்று வாய் வழி வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிங்கராயனும் அவன் மகன் கைலாயநாதனும் இணுவிலூருக்குப் பெரும் புகழ் தேடித்தந்துள்ளனர். ஐரோப்பியர் தமது ஆட்சிக்காலத்தில் தங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு பல வழிகளாலும் முயன்ற போதும் எமது மன்ணில் எவரும் மதம் மாறாதிருந்தது எமதூரின் சிறப்புகளில் ஒன்றாகும். தமிழிலும் சைவத்திலும் மிகவும் செழித்து வளர்ந்த இணுவில் கிராமமானது போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போதும் இயல், இசை, நாடகம் போன்ற துறைகளோடு சைவமும் யாழ்ப்பாணத்தில் செழித்து வளர்வதற்கு பெரும் உதவியாக இருந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இணுவிலுக்குப் பெருமை தேடித்தந்தவர்களில் ஒருவர், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அந்தணர் குலத்தில் பிறந்த நடராசையர். நாவலரிடம் கல்வி பயின்றவர். மேலும் இளமையிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் வடமொழியையும் நன்கு கற்றவர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். தமிழ்நாடு சென்று அறிஞர் பலருக்கு ஆசிரியராய் விளங்கி சைவத்தினையும் தமிழையும் நன்கு ஆதரித்ததுடன் சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டார்.

இணுவிலின் புகழை அலங்கரித்த இன்னொருவரே பொன்னம்பலப் பிள்ளைக்கும் சிவகாமசுந்தரி அம்மாளுக்கும் பிறந்த புலவர் அம்பிகைபாகர். (1854 -1904). ஆறுமுகநாவலரிடம் தொல்காப்பியம், சேனாவரையம் ஆகியவற்றையும், நடராசையரிடம் சிவஞான சித்தியாரையும் கற்றுத் தேர்ந்து, தணிகைப் புராணத்திற்கு உரைஎழுதியுள்ளார். சி.வை.தாமோதரம்பிள்ளையின் நண்பராகி அவருடன் சேர்ந்து இலக்கியப் பணிகளைச் செய்தார்.

ஆரம்பகாலத்தில் கல்விக்கு வித்திட்ட திண்ணைப்பள்ளிகள் ஆசிரியரின் வீட்டிலோ அல்லது அவ்வூர்ப் பெரியவரின் வீட்டிலோதான் அமைந்திருந்தன. திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களைச் சட்டம்பியார் என்றும் அழைப்பார்கள். ஆசிரியர் தனியாக ஒரு திண்ணையில், பலகையிலோ அல்லது பாயிலோ அமர்ந்திருப்பார். அவரைச் சூழவுள்ள திண்ணையில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்திருந்து பாடத்தைக் கேட்பார்கள். பெரும்பாலும் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கே காலையில் வகுப்புக்கள் இருந்தன. மாலையில் இலக்கணம், இலக்கியம், புராணபடனம், சோதிடம் என்பன கற்பிக்கப்பட்டன. அக்காலத்தில் பாடங்களை வாய்மொழியாகவே படிப்பித்தார்கள்.

திண்ணைப் பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்கள் அங்கு கற்பதோடு, ஆசிரியரின் வீட்டு வேலைகள், வயல் வேலைகள் போன்றவற்றையும் செய்வார்கள்.
நாளடைவில் திண்ணைப் பள்ளிகள் பாடசாலைகளாக அமைந்தன.

இணுவிலின் தெற்குப் பகுதியில் பரராசப்பிள்ளையார் ஆலயத்தின் அண்மையில் அந்தணர் ஒருவரின் காணியில் கல்வி கேள்விகளில் சிறந்த வெங்கடாசலம் ஐயர் என்பவர் ஒரு திண்ணைப் பள்ளியை அமைத்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். நாளடைவில் கல்வி வளர்ச்சியில் ஆர்வம்மிக்க அம்பிகைபாகர் முயற்சியாலும், நாவலர் பெருமானின் தூண்டுதலாளும் இந்தத் திண்ணைப் பள்ளி பெரும் குடிசை போடப்பட்டு 1864 வது ஆண்டு சைவப்பிரகாச வித்தியாசாலையாக மாறியது. இம் முயற்சியில் அம்பிகைபாகரின் பங்கு பெருமளவில் இருந்ததனால் இதனை ” அம்பியர்பள்ளிக்கூடம்” என்றும் ஊரார் அழைத்தனர். தற்போது தரமுயர்த்தப்பட்டு பல அபிவிருத்திகளுடன் இணுவில் இந்துக்கல்லூரியாக விளங்குகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிறித்தவமதம் பரப்பவந்தவர்களால் 1903ம் ஆண்டு அமெரிக்கமிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பாடசாலை இணுவில் மக்லியொட் மருத்துவமனையை ஒட்டியிருந்த நிலப்பகுதியில் நடைபெற்றது. பின்னர் காங்கேசன்துறை வீதியருகே புளியமரங்கள் நிறைந்த இடத்தில் அமைந்திருந்தது. இதனால், இதனை “சீனிப்புளியடிப்பாடசாலை” என்றும் அழைக்கப்பட்டது.ஆரம்பத்தில் மூன்று அடி உயரம் கொண்ட இரு பக்கச் சுவரோடு அமைந்த குடிசையாக இந்தப் பள்ளிக்கூடம் இருந்தது எனத் தெரியவருகிறது. இதற்கு தலைமைவாத்தியாராக திரு. ஆறுமுகம் என்பவரும் ஆசிரியையாக அவரது மனைவியும் இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்தப் பள்ளிக்கூடமே இன்று இணுவில் மத்திய கல்லூரியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அன்று எனக்குத் தெரியக் கூடியதாக கிறிஸ்தவர்களான பத்தினிப்பிள்ளை (அக்கா) மிஸ் உவில்லியம் போன்றவர்கள் இங்கு கற்பித்திருக்கிறார்கள். பள்ளிக் கூடத்தின் விஸ்தீரணத்துக்காக இணுவிலின் ஒரு அடையாளமாக இருந்த புளியமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு, இன்று இணுவில் மத்திய கல்லூரியின் ஆரம்ப பாடசாலையாக இந்தப் பள்ளிக்கூடம் விளங்குகிறது.

இணுவிலில் மக்கள் பெரும்பாலும் சைவசமயத்தையே பின்பற்றியவர்களாதலினால் குழந்தைகளை சைவமரபின்படியே, கல்வி கற்பிக்க வைப்பதற்கு முடிவுகொண்டு, காங்கேசன்துறை வீதியின் மேற்குப்புறமாக 1930ம் ஆண்டில் திரு. மு.அப்பாகுட்டி அவர்களின் வீட்டிற்கு பின்புறத்தில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று பரப்பு நிலத்தில் உள்ள ஒரு கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் கூடிய மாணவர்கள் வந்து படிக்க ஆரம்பித்ததும் நாளடைவில் சைவமகஜனா வித்தியாசாலையாக உருவெடுத்தது. திருவாளர்கள் மு.அப்பாக்குட்டி, க.மயில்வாகனம், க.பொன்னையா ஆகியோர்களே இப்பாடசாலைக்கு மூலகாரணமானவர்கள். இந்தப் பாடசாலை இன்று மத்திய கல்லூரியாக விளங்குகிறது.

பத்தொன்பதாம் நூற்ராண்டின் ஆரம்பத்தில் இலங்கைச் சட்ட நிரூபணசபையில் இருந்த, மானிப்பாயைச் சேர்ந்த சேர் பொன்னம்பம்பலம் இராமநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்காக ஒரு கல்வி நிறுவனம் வேண்டும் என்பதற்காக இணுவில் கிராமத்தில் மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் இருபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1913ம் ஆண்டு சகல வசதிகளுடன் இராமநாதன் கல்லூரியை கட்டுவித்தார்.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காலத்தின் பின்னர் அவருடைய மருமகனும் சிறந்த கல்விமானுமாகிய சு.நடேசபிள்ளை அவர்கள் இராமநாதன் கல்லூரியின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இசை நடனப் பகுதிகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்று வடபகுதிக்கான பல்கலைக்கழக நுண்கலைப்பீடமாக மிளிர்ந்து இணுவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்து இணுவில் கிராமத்தின் புகழை மேலும் ஓங்கச் செய்தவர் சிதம்பரநாதன் என்பவரின் புதல்வராகத் பிறந்து கதிர்காமசேகரமான முதலியார் என இயற்பெயர் கொண்ட இளமையிலே கவிபாடும் திறன் கொண்ட சின்னத்தம்பிப்புலவராவார். இவர் அன்னை சிவகாமி மீது கவிபாடியதால் இவரைச் சின்னத்தம்பிப் புலவர் என அழைத்தனர்.

இவர் தோம்பு எழுதும் பணியில் ஈடுபட்ட போது யாரோ கொடுத்த தவறான தகவலின் படி ஒல்லாந்தரினால் சிறை பிடிக்கப்பட்டார். இவர் சிறையிலிருந்தபோது, கருணாகரப் பிள்ளையாரையும், சிவகாமியம்மையாரையும் துதித்துப் பாடினார். ஏழாவது பாடல் பாடிய போது, இவரை அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கதவு திறக்கப்பட்டதென்றும் அதைப் பார்த்த சிறைஅதிகாரி புலவரினை வணங்கி சிறையிலிருந்து அவரை விடுவித்தான் என்றும் எட்டாவது பாடல் பாடியதும் புலவருக்குச் சதிசெய்தவன் சிறையில் அடைக்கப்பட்டான் என்றும், புலவர் மிகுதி இரு பாடல்களையும் பாடிச் சிறை நீக்கிய பதிகத்தினை நிறைவு செய்தார் என்றும் வரலாறு கூறுகிறது.

சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலில் சிறை நீக்கியபடலம், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் எனும் பகுதிகளை மிகவும் சிறந்த கவியாகப் பாடினார். பஞ்சவர்ணத்தூது, நொண்டிநாடகம், கோவலன் நாடகம் எனும் நூல்களையும் சின்னத்தம்பிப்புலவர் எழுதியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த பெருஞ்சித்தர் பெரிய சந்நியாசியார் இலங்கையில் எங்கும் இல்லாதவாறு ஒரு பெரிய மஞ்சத்தை அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடுஉருவாக்கினார். மேலும் காரைக்கால் சிவன் கோவிலை புனருத்தாரணம் செய்து, வழிபாட்டுத்தலமாகவும் அமைத்தார்.

அந்தக்காலத்தில் இருந்து இசைத்துறையிலும் நாடகத்துறையிலும் சிறந்த கலைஞர்கள் இணுவிலில்வாழ்ந்தார்கள். இவர்கள் இசை நாடகக்கலையை இணுவிலில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் சிறப்பாக வளர்த்தார்கள் என்று கூறலாம். சிறந்த நாடக அரங்கொன்றும் அப்போது இங்கு காணப்பட்டது என்று முதியோர் கூறுகிறார்கள்.

பரராஜசேகரப் பிள்ளையார், காரைக்கால் சிவன், சிவகாமி அம்மன், செகராஜசேகரப் பிள்ளையார், நொச்சியோலை கந்தசுவாமியார், மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர், இளந்தாரியார், கிழக்கு கப்பனைப்பிள்ளையார் (அரசோலைப்பிள்ளையார்) ஆஞ்சநேயர், கருணாகரப் பிள்ளையார், திருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஞானலிங்கேஸ்வரர், போன்ற பல்வேறு தெய்வங்களும் குடி கொண்டிருக்கும் இணுவில் கிராமத்தில், மணியோசையும் மூன்று காலப் பூசைகளும், மந்திரங்களும், தேவார, திருவாசக பாடல்களும், பஜனைகளும், கூட்டுப் பிரார்த்தனைகளும், மங்கள வாத்தியங்களும் ஒலித்து, என்றும் பக்திமயமான சூழலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.

கடல் கடந்து கிறிஸ்தவ மதத்தைப்பரப்ப வந்த அமெரிக்க மிசனறியைச் சேர்ந்த மேரி, எலிசபெத் லீச் என்ற இரு சகோதரிகளினால் ஆரம்பிக்கப்பட்டு, பெருமளவில் பணம் வழங்கி உதவிய மக்லியட் தம்பதிகளின் (Rev & Mrs. McLeod) பெயரோடு 1898ம்ஆண்டுஆரம்பித்து 1911ம் ஆண்டளவில் மருத்துவப் பிரிவோடு யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் பிரசவத்திற்கு வருவோருக்கு பெரும் மருத்துவ சேவை புரிந்து வந்தது. வைத்தியசாலைப் பகுதியிலேயே சிறுதேவாலயம் அமைக்கப்பட்டு பைபிள் வகுப்புகள் நடைபெற்றன.

வெளிநாட்டு வைத்தியர்கள் முதற் கொண்டு உள்ளூரிலும் வெளியூரிலும் மருத்துவம் படித்த வைத்தியர்கள் இங்கு பணி புரிந்தனர். வெளியூரில் இருந்து பிரசவம் பார்ப்பதற்காக பலர் இங்கு வந்து சுகப்பிரசவம் பெற்றுச் சென்றனர். இங்கு மிசனரியைச் சேர்ந்த தாதிமார்களோடு, நம் உள்ளூர் பெண்களும் தாதிகளாகப் பயிற்சி மேற்கொண்டு பணிபுரிய ஆரம்பித்தனர். இவர்களில் பிரதமதாதியாக நல்லம்மா என்பவர் சிறப்பாகப் பணி புரிந்தார் என்று தெரியவருகிறது.

இணுவில் வைத்தியசாலையில் அந்தக்காலத்தில் கடமையாற்றி வந்த டாக்டர் கெங்கம்மா என்பவர் பல பிரசவங்களை மிகச் சிறப்பான வையித்திய அணுகு முறையினை கையாண்டு யாழ்ப்பாண மக்களிடையே மிகப்பிரபலம் பெற்றிருந்தார். அவரது கைராசி பற்றி மக்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவருடடைய கைராசியில் நம்பிக்கை கொண்டு பலர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரை நாடி வந்து பயனடைந்தனர். தூர இடங்களில் இருந்து வருபவர்கள் தங்கிப் போகவும், சமைத்துச் சாப்பிடவும் வசதிகள்செய்யப்பட்டிருந்தன.

இரவு ஒன்பது மணிக்குப் பின்னர் ஆண்கள் அங்கே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்காக ஆண்கள் தங்குவதற்காக ஒரு விடுதி வசதி வையித்தியசாலையின் முன்பாக இருந்தது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தங்குவதற்காக தங்கும் விடுதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. தினமும் இரவு ஒன்பது மணிக்கு அங்குள்ள தேவாலயத்தில் ஒலிக்கப்படும் மணியோசை உழைத்து, களைத்து அன்றாட வேலைகளை முடித்த மக்களை தூங்குவதற்கு தயாராகும்படி கேட்டுக் கொள்வது போல இருக்கும்.

மிகவும் பிரசித்தி பெற்று, இணுவிலுக்குப் பெயர்தந்த“இணுவில்ஆசுப்பத்திரி” கால மாற்றங்களினாலும் அரசியல் சூழ்நிலைகளினாலும் சரிவரப் பராமரிக்கப்படாது சீர்குலைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு சிறிது சிறிதாக வைத்திய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அறிவில் சிறந்த ஆசிரியர்கள், புகழ் பெற்ற பேராசிரியர்கள், உலகம் போற்றும் ஆன்மிக ஞானிகள், வேதாந்திகள், சித்தர்கள், இசைவிற்பன்னர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டர்கள், பிரபல வர்த்தகர்கள் மண்ணின் வளம் காக்கும் விவசாயிகள், வாழ்ந்தும், வாழ்வதுமான இந்த மண்ணில் பிறந்ததற்காக நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டும். இங்கு பிறந்த மக்கள், இன்று வெளிநாடுகளில் வெளிநாட்டவர்களுக்கு சவால் விடும் வண்ணம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருவது நாம் அறிந்ததே. கூடிய விரைவில் நமது கிராமம் உலக அளவில் பேசப்பட்டு பெரும் சாதனை படைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இணுவிலான்
சிகாகோபாஸ்கர்

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?