ஆலயங்கள்

இணுவில் கந்தசுவாமி கோவில்

இணுவில் கிராமத்தின் மத்தியில் அருள் சுரக்கும் கந்தசுவாமி கோயில் காலத்தால் முந்தியது. இச் சூழலில் இன்று ஆலயங்களின் தெய்வீக அலையும், கல்விச்சாலைகள், இரு பாரிய நூலகங்கள், கலைகள் வளர்க்கும் சிவப் பொலிவுடன் அறப்பணியாற்றும் மன்றங்கள் அணி செய்ய, மையமாக அமைந்திருக்கும் கந்தப்பெருமானின் அற்புதங்கள் சொல்லில் அடங்காதவை. முருகப் பெருமான் தமக்கென ஒரு ஆலயம் அமைக்குமாறு தமது பக்தனுக்கு அறிவுறுத்தினார். நீடிய காலத்தின் பின் அழிவுற்ற அவ்வாலயத்தை உருவாக்குமாறு கனவில் தெரிவித்தார். மேலும் ஆலய முன்னேற்றத்துக்காக மீண்டும் பல அடியார்களுக்குக் கனவு மூலம் தெரிவித்தார்.

இதன் பேறாக இவ்வாலயத்திற் பல சிறப்புகள் அமைந்து உலகப் புகழ் ஓங்கவும் வித்திட்டார். முருகப்பெருமானின் திருவிளையாடல் இவ்வாலயம் சிறக்கவும், சமயநெறி வளரவும், இக் கிராமத்தின் சமய, தமிழ், கலைகள், அற்புதங்கள் உலகளவில் பரந்து பெருமையை நிலைநாட்டியது. பண்டைய தமிழ் மன்னர் கால ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் இணுவில் பெரும் பிரிவில் அரச பிரதானியாக நிர்வகித்த பேராயிரவனின் மரபைச் சேர்ந்த கனகராசமுதலி என்பவன் பதின்நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1365 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இவ்வாலயச் சூழலில் வசித்து வந்தான்.

இவன் இவ்வூர் மக்கள் சிறப்புடன் வாழவேண்டிய சகல உதவிகளையுஞ் செய்து தனது அரச பணிக்குமெருகூட்டினான். இவன் சிறந்த சைவ சமய பக்தன். இவனின் இராசதந்திரங்களும் நீதியான நெறிமுறையும் குடிமக்கள் மீது மிகுந்த அன்பும் பாராட்டியதால் ஊர் மக்களும் இவனுடன் நல்லுறவு பேணி அன்புடன் வாழ்ந்தனர். ஒருநாள் இரவு கனகராசமுதலியின் இல்லிடச் சூழலில் பெரிய தீப்பிழம்பு தோன்றியது. இதை அவதானித்த மக்கள் முதலியின் நெற்போர் தீப்பற்றி எரிவதாக எண்ணி அவ்விடத்தை நாடி ஓடினர். அங்கு குழுமிய மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் ஏற்படாததைக் கண்டு வியந்தனர்.

கனகராசமுதலியிடம் சென்று தாம் கண்ட விபரத்தைத் தெரிவித்தனர். அப்போது முதலி தான் ஓய்வெடுத்திருந்த வேளை இரு அந்தணச் சிறுவர்கள் தாம் காஞ்சியிலிருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறு கூறியதும் மறைந்துவிட்டனரெனக் கூறினான். தமது குலதெய்வமான காஞ்சியம்பதி குமரக்கடவுளே தனக்கும் குடி மக்களுக்கும் நல்லருள் புரிவதன் பேரில் காட்சி தந்ததாகவும் உள்ளம் உருக இறையருளை வியந்தான். இறையருள் கைகூட்டக் கனகராசமுதலி இரு குடிசைகளை அமைத்து முருகனாகவும் வைரவராகவும் வழிபட்டான். இவ்வூர் மக்களும் பய பக்தியுடன் வழிபட்டு வந்தனர். இதனைக் கர்ண பரம்பரைக் கதையொன்று செப்புகிறது.

முருகப் பெருமானை ஆதரித்து ஊர் மக்களும் சமய நெறியை உணர வைத்து நல்லாட்சி புரிந்த முதலியை இவ்வூர் மக்கள் என்றும் மறவாது நினைவு கூரும் வண்ணம் இவ்வாலய வாசலில் 150 யார் தொலைவில் “முதலியாரடி” என்னும் பெயரில் சிறுகுடிசை அமைத்து இன்று வரை வணங்கி வருகின்றனர். ஆண்டுகள் பல
சென்றன. போர்த்துக்கேயரின் வரவால் ஆலயங்களில் அழிவும், சமய வழிபாட்டின் தடையும் ஏற்பட்டன. மக்கள் தமது சமய நெறியை அகத்தளவில் போற்றி வழிபட்டு வந்தனர்.

தமிழ்ச்சங்கம் பரராசசேகர மன்னன் நல்லூரை இராசதானியாக்கி இருந்த வேளை அவனின் உறவினரான அரசகேசரி என்பவன் நல்லூரில் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழை வளர்த்தான். இதே வேளை இணுவில் கிராமத்தின் சிறப்பை அறிந்து தமிழ்க்கடவுளான இணுவில் கந்தசுவாமி கோயிலின் சூழலிலும் தமிழ்ச்சங்கம் அமைத்து முருகப் பெருமானின் உறுதுணையை நாடினான். இத்தமிழ்ச்சங்க வளர்ச்சியின் பேரில் சங்குவேலியில் உள்ள ஒரு நெல்வயலை அன்பளிப்புச் செய்தான். தமிழ்ச்சங்கத்தின் காவலனாக அமைந்த இணுவில் கந்தசுவாமி கோயிலின் பேரில் தருமசாசனம் எழுதப்பட்டது. காலப்போக்கில் சங்கம் செயற்படாத போதும் உரிய வயலின் குத்தகை நெல் வருடா வருடம் இவ்வாலயத்தில் வழங்கப்பட்டு வந்தது.

இணுவில் கந்தசுவாமி உலகப்பெருமஞ்சத் திருவிழா

ஆலயத் தோற்றம்

நீண்ட காலத்தின் பின் தற்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் வெற்றிலைத் தோட்டம் அமைத்த இணுவில் குடிமகனான பக்திமான் குழந்தையர் வேலாயுதர் நற்பேறு பெற்றார். இவரின் கனவிற் தோன்றிய முருகப் பெருமான் தான் காஞ்சியிலிருந்து வந்ததாகவும் , வெற்றிலைத் தோட்டத்தில் தான் குறிப்பிட்ட இடத்தில் தன்னை ஆதரிக்குமாறும் கூறினார். மேலும் அத்தோட்டத்தில் ஒரு நொச்சி மரக்கிளை நாட்டப்பட்டும் அருகே தனது காலால் மிதித்திருப்பதாகவும் தெரிவித்து மறைந்தருளினார்.

மறுநாட் காலை வேலாயுதர் தனது தோட்டத்தை அடைந்தபோது புதியதொரு நொச்சி மரம் நிற்பதையும் அருகில் கால் மிதித்த அடையாளத்தையும் கண்டார். ஆனந்த மேலீட்டினால் முருகப் பெருமானை வியந்து அவ்விடத்தில் ஒரு குடிசையை அமைத்து விளக்கேற்றி வழிபட்டார். இதனால் இக்காணிக்கு நொச்சியொல்லை மிதியன் என்னும் தோம்புப் பெயர் ஏற்பட்டது. இவ்வாலயத்தின் தல விருச்சமான நொச்சிமரம் கருவறையின் அருகே காணப்படுகிறது. இன்றும் இவ்வாலயம் நொச்சியொல்லை முருகன் என முதியோர்களால் அழைக்கப்படுகிறது.

இவ்வாலயம் தொடர்ந்து குழந்தையர் வேலாயுதரின் பின்னுரிமையாளராலேயே பராமரிக்கப்பட்டு வந்தது. குடிசை இருந்த இடம் செங்கற்களாலும் பின்னர் வெள்ளை வைரக் கற்களாலும் மாற்றஞ் செய்யப்பட்டு வந்தது. ஒரு சமயம் கட்டுமானப் பணிக்கான நிதிவளம் குன்றியது. முருகப் பெருமான் கனவில் அறிவுறுத்தியபடி தாவடியைச் சேர்ந்த கோமேசு முதலியார் பேருதவி புரிந்தார். கட்டுமானப்பணிகள் 1840 இல் நிறைவு கண்டது. கோமேசு முதலியின் திருப்பணிச் சிறப்பினால் முருகப் பெருமானின் அர்த்த மண்டப வாசலில் மேற்புறத்தில் அமைந்த கல்லில் 1905 ஆம் ஆண்டளவில் திருப்பணிகள் செய்தமைக்கான கல்வெட்டு இருப்பதாகவும் இக்கல்வெட்டு பேராசிரியர் சி.பத்மநாதனின் ஆய்வில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையின் பின்பே இவ்விபரம் தெரியவருமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணுவில் கந்தசுவாமி ஆறுமுகப்பெருமான்

ஆறுமுகப் பெருமான்

ஆலய பூசகரான சின்னையர் என்பவர் தமக்கொரு மகப்பேறு வேண்டி இவ்வாலயத்தில் ஆறுமுகப் பெருமானின் திருவுருச்சிலை அமைக்க முன் வந்தார். இருமுறை எத்தனித்தும் அவரின் முயற்சி கைகூடவில்லை. பூசகர் முருகப்பெருமானை வேண்டினார். முருகப்பெருமான் பூசகரின் கனவிற் தோன்றி வண்ணார் பண்ணையிலுள்ள ஸ்தபதியினரால் திருச்செந்தூர் முருகனின் தோற்றத்தில் மயில் மீது வள்ளிதேவசேனா சமேத ஆறுமுகப்பெருமான் நின்ற நிலையிலான திருவுருச்சிலையை நிறுவுமாறு கூறினார்.

ஐயரின் பக்தியும் முருகனின் திருவருளும் மேலிட 1886 இல் ஆறுமுகப் பெருமானின் (ஐம்பொன்) அழகான சிலை அமைந்தது. ஆறுமுகப் பெருமானின் சூரன்போர் நிகழ்வுக்கான கடா வாகனமொன்றை உருவாக்க சுதுமலையைச் சேர்ந்த சாத்திரி சின்னையா என்பவர் முன்வந்தார். அவ்வாகனத்துக்கான கொம்பு சரியாக அமையாததால் வாகனஞ் செய்தவரும் செய்வித்தவரும் இறைவனிடம் தமது குறையை நீக்குமாறு வேண்டினர்.

முருகப்பெருமான் சின்னையாவின் கனவிற் தோன்றி ஒரு பற்றையை அறிமுகஞ்செய்து அதன் நடுவேயுள்ள மரக்கிளையிலிருந்து கடா வாகனத்தின் கொம்பை அமைக்குமாறு கூறினார். அவரும் குறித்த இடஞ் சென்றபோது உரிய மரம் கிடைத்ததும் முருகனின் அருளை வியந்து தமது நேர்த்தியை நிறைவு செய்தார். கொம்பின் அழகிய வடிவம் யாவரையும் வியக்க வைக்கிறது.

வாசற்கோபுரம்

சுதுமலையைச் சேர்ந்த முத்து நாகலிங்கம் என்பவர் முருகன் மீதிருந்த பக்தியின் பேறாக வாசற்கோபுரம் அமைக்க முன்வந்து 1905 இல் ஆரம்பித்தார். மூன்று தளத்தில் அரிய தோற்றமுடைய திருக்கோபுரம் 1909இல் நிறைவு கண்டது. இதே அன்பரின் பக்தியால் முருகப் பெருமான் தேரிலிருந்து இளைப்பாறும் ஊஞ்சல் மண்டபமும் நிறுவப்பட்டது.

உலகப்பெருமஞ்சம்

ஆலய உரிமையாளரின் உறவினரும் மஞ்சத்தடியில் வாழ்ந்த சித்தருமான பெரிய சந்நியாசியார் இணுவில் கந்தப் பெருமானின் ஆலயப் பணியில் இணைந்தார். உரிய காலம் வந்ததும் பெரிய சந்நியாசியாரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான் ஒரு பெரிய மஞ்சத்தின் திருவுருவைக் காண்பித்து தாம் வீதியுலா வருவதற்காகத் திருமஞ்சமொன்றை உருவாக்குமாறு கேட்டிருந்தார். முருகப் பெருமானின் பெருங்கருணையாலும் பெரியார் தமது சித்து மகிமையாலும் தமது தொண்டர்களின் உதவியினாலும் தகுந்த மரங்களை முதலில் சேகரித்தார்.

முருகப்பெருமான் சித்தரின் உருவில் இந்தியாவுக்குச் சென்று சிற்பாசாரியை அழைத்து வந்தார். பெரியார் 1902 ஆம் ஆண்டில் திருமஞ்ச வேலையை தமது வீட்டருகே ஆரம்பித்தார். குறை வேலையுடன் கந்தசுவாமி கோயிலுக்கண்மையில் திருமஞ்ச மிகுதி வேலையையும் பூர்த்தி செய்தார். 1906 இல் இப்பெருமஞ்சம் வெள்ளோட்டம் கண்டது. முதன் முதல் 1906 தைப்பூசத் திருநாளன்று ஆறுமுகப்பெருமான் பெரிய சந்நியாசியாரின் பக்தியையும் சித்து மகிமையையும் உலகறியச் செய்யும் திருவிளையாடலின் ஓர் அங்கமாக தமது ஆலயப் பெருவீதியில் பெருமஞ்சப் பவனி வந்தார்.

மஞ்சத்தின் சிறப்பை வேறொரு பந்தியிலும் அறிவோம். இவ்வரிய காட்சியை ஒரு முறையேனும் தமது கண்ணாற் கண்டவர்கள் முருகப் பெருமானின் பேறு பெற்றவர்களாவர். இத் திருமஞ்ச உலா தைப்பூசத்தன்றும் வருடாந்த பெருவிழாவின் பன்னிரண்டாம் திருவிழா அன்றும் பவனி வருவதைக் காணலாம். இவ்விழாக்களைக் கண்டு களிக்க நாட்டின் பல்வேறிடங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து கூடி அருள் பெறுவர். இவ்வரிய கலைக்களஞ்சியம் இணுவையூர் கந்தப்பெருமானின் முதுபெருஞ் சொத்தாகவே பாதுகாக்கப்படுகிறது.

மேலும் இத்திருமஞ்சம் இணுவையூரின் உலகப் பெரும்புகழுக்கு வித்தாகவும் அமைந்தமை சிறப்புடையதாகும். அறுபது வருடங்களுக்கு மேல் திருப்பவனி வந்த இப்பெருமஞ்சம் பழுதடைந்ததால் ஒரு சில வருடங்கள் ஓடாது முடங்கிக் கிடந்தது. இதை உணர்ந்த முருகன் அடியார்கள் சிலரின் வேண்டுதலுக்கேற்ப பிரபல இணுவில் வர்த்தகரான கல்கி நிறுவன அதிபர் சின்னத்துரையும் அவர்தம் உறவினர் இராசநாயகமும் எடுத்த பெருமுயற்சியால் பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது. இக்கலைக் களஞ்சியம் ஆரம்ப கால அழகையும் விஞ்சும் வண்ணம் மெருகூட்டப்பட்டது. பாதுகாப்பின் பேரில் புதிதாக அமைக்கப்பட்ட மஞ்ச வீட்டில் (1983) நிறுத்தப்பட்டுள்ளது.

ஏழு தேர்ப்பவனி

இணுவில் கந்தப் பெருமானின் வேண்டுதலையடுத்து இணுவில் கந்தசுவாமி கோயிலிலிருந்து பெருவிழாக்கால ஏழு தேர்ப் பவனி காரைக்கால் சிவாலயம் வரை சென்று வரும் ஏற்பாட்டினைப் பெரிய சந்நியாசியார் நிறைவேற்றினார். தேரோடும் வீதி வழியே ஆலயச் சூரன்போரும் காரைக்கால் வரை சென்று சிவாலயத்தின் தென்திசையில் நூறு யார் தொலைவில் சிறப்பாக நடைபெற்றது. காலப்போக்கில் யாவும் யாவும் அருகிவிட்டன. தேருலா மற்றும் சூரன்போர் விழாக்கள் நிறுத்தப்பட்டதும் வீதியின் இருமருங்கின் எல்லைகளும் வீதியின் அகலத்தைக் குறுகச் செய்தன.

இணுவில் கந்தசுவாமி தேர்த் திருவிழா

இதர திருப்பணிகள்

முருகப் பெருமான் பெரிய சந்நியாசியாரின் கனவில் தெரிவித்ததன் பேரில் இவ்வாலய மேற்கு வீதியில் ஒரு திருக்கேணியையும் தோற்றுவித்தார். இக்கேணி நாளடைவில் தூர்ந்து போய் விட்டது. பிற்காலத்தில் அவ்விடத்தில் ஒரு கிணறு உருவாகவும் ஏனைய பகுதி மூடிச் செப்பனிடப்பட்டது. 1946 இல் புதியதொரு கண்டாமணி புதிய மணிக் கோபுரத்தில் உருவாக்கி அமைக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன் இவ்வூர் இலண்டன் வாழ் அன்பர்களின் பேருதவியால் புதியதோர் வேறு கண்டா மணியும் செய்விக்கப்பட்டு கோபுரத்தின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் இரு மருங்கும் அமைந்த மணிகள் சிறப்புடன் ஒலிக்கின்றன.

1953 இல் இவ்வாலயம் பொதுக்கோயிலாக நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆலயம் புனர்நிர்மாணஞ் செய்யப்பட்டு 1967 இல் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1976 இல் பொதுமக்களின் உதவியுடன் வ.சுப்பையாவின் பெருமுயற்சியால் ஆறுமுகப் பெருமான் உலாவரும் புதிய சித்திரத்தேர் உருவானது. 1989 இல் பொதுப்பணியாகப் புதிய திருச்சப்பறம் உருவானது. 2001 இல் இவ்வாலய 80’x48′ விசாலமான மணிமண்டபம் அமைக்கப்பட்டது. ஆறுமுகப் பெருமான் வாசல் (தெற்கு வீதியில் கோபுரம் ஒன்று கலாநிதி இ.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்டது.

விழாக்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் யாவும் ஒருங்கமைந்த இவ்வாலயம் ஆனிமாத அமாவாசையன்று தீர்த்தவிழா அமையும் வண்ணம் முந்திய வளர்பிறைச் சஷ்டி திதியில் கொடியேற்ற விழா ஆரம்பமாகி இருபத்தைந்து தினங்கள் பெருவிழாக்கள் நடைபெறும். இவ்வாலயத்தின் வடபால் அமைந்த விளாத்தியடி வைரவப் பெருமான் (முன்னாளில் கனகராச முதலியால் நிறுவப்பட்டது) மிக அற்புதமானவர். இவ்வாலய வாசலில் அமைந்துள்ள திருக்கிணற்றிலேயே முருகப் பெருமானின் தீர்த்த விழா நடைபெறுகிறது.

இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்கள் இக்கிணற்று நீரை மருந்தாகப் பயன் படுத்துகிறார்கள். தீராத நோய்களையும் தீர்க்க வல்ல இப்புனித நீரில் நீராடுபவர்கள் நற்சுகம் பெறுவர். இக்கிணற்றின் அருகே ஒரு கல்யானை அமைந்துள்ளது. இரண்டடி உயரங் கொண்ட இக்கல்யானை ஆரம்பத்தில் கருவறையில் அமைந்த வேற்பெருமானின் பீடமாக இருந்து ஆலய மீள் புனர்நிர்மாணஞ் செய்யும் போது அதனை அகற்றிப் புதிய பீடமமைந்ததெனவும் இக் கல்யானையை இவ்விடத்தில் வைத்ததாகவும் முன்னோர் கூறினர். இவ்வாலயத்துக்கு வழிபட வருபவர்கள் கல்யானைக்குக் குறைந்தது மூன்று வாளி நீரெடுத்து அபிஷேகஞ் செய்து மன நிறைவடைகின்றனர்.

இவ்வாலயத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன் நடைபெற்ற பெருந்திருவிழாக்கள் பற்றிய சில குறிப்புகளையும் ஞாபகத்தில் கொள்வது சிறப்பாகும். இணுவில் கிராமத்தில் முத்தமிழுக்கும் உறைவிடமாக இணுவில் கந்தசுவாமி கோயில் சூழல் அமைந்திருந்தது. குறிப்பாக இசை வேளாளர் குடும்பத்தினர் கூடுதலாக இங்கு வசித்தனர். பங்குனி மாதந் தொடக்கம் ஆவணி மாதம் முடியும் வரை உள்ள காலத்தைத் தமது சிறப்பான காலமாகக் கருதி இந்தியாவிலிருந்தும் ஏனைய இடங்களிலிலிருந்தும் சிறந்த தவில், நாதஸ்வரக் கலைஞர்களை ஒன்று சேர்த்து ஒரு குழுவாக (செற் அழைப்பர்) அமைத்து ஆலய சேவைகளுக்காகப் பிரகடனப்படுத்துவர்.

இதன் பேறாக இவ்வாலயச் சூழலில் அநேக கலைஞர்கள் தங்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அமையும் குழுவினரின் நாள் மேளம் (ஆரம்ப நாள்) இலவசமாக கச்சேரி நடாத்துவர். இவ்விடத்தில் பல குழுக்கள் அமைவதால் இவ்வாலயத் திருவிழாக்களில் நாளாந்தம் பத்துக்கும் மேற்பட்ட குழுவினர் தமது திறமையைக் காண்பிப்பர். இரவுத் திருவிழாக்கள் மாலை தொடக்கம் மறுநாட்காலை ஏழு அல்லது எட்டுமணி வரை நடைபெறும். பொது மக்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை ஒன்றுகூடி விழாக்களைக் கண்டு களித்தனர்.

கூடுதலான மேளக் கச்சேரிகளுக்கேற்ப முத்துச்சப்பறம் சோடனைக்கான சிகரங்கள் பலவும் இணைக்கப்படும். மேலும் சின்னமேளம் எனப்படும் நடனமும் இடம்பெற்றன. பெரிய சப்பறத்தில் சுவாமி வீதியுலா வரும்போது திருவிழாவில் உயிரான ஏழு குதிரைகள் (தொடர்ந்து பல ஆண்டுகள்) பூட்டியே சுவாமியுடன் சப்பறங்கள் இழுத்துச் செல்லப்படும். அந்த நாட்கள் இனி வருமா? அக்காலத்தில் வீதியுலாவின்போது நாதஸ்வரக் கலைஞர்கள் இனிய இராகங்களையும் பக்திப் பாடல்களையும் மட்டும் இசைத்தனர்.

வருடாந்தப் பெருவிழாக்களைத் தொடர்ந்து இவ்வாலயத்தில் கந்தஷஷ்டி விழாக்கள் சிறப்பானவை. பகலில் சூரபத்மன் வதைப்படலம் புராண படனமாக வாசித்துப் பொருள் தரப்படும். மாலையில் அபிஷேகம், பூசைகள், சண்முகார்ச்சனை நடைபெற்றே சண்முகப்பெருமான் உள், வெளி வீதியுலா வருவார். உள்வீதியுலாவில் யாக பூசை நடைபெறும். சூரன்போரிற்காக நூறு வருடங்களுக்கு முன் அமைந்த சிவந்த கடா வாகனத்தில் வரும் முருகனின் அழகுக்கு நிகரேது சூரன் போர் முடிந்ததும் மறுநாள் ஆறுமுகப் பெருமான் வெளி வீதியுலா வந்து தீர்த்தமாடி யாவரையும் மகிழ்விப்பார். இதனால் பக்தர்களின் அக, புற வினைகளும் அகலும்.

இணுவில் கந்தசுவாமி கந்தசஷ்டி சூரசம்காரம்

முருகன் புகழ் மணக்க

இவ்வாலயத்தில் வருடம் முழுவதும் புராண படனம் ஓதப்படுகிறது. பக்தர்கள் பூசை வேளைகளிலும் விழாக்காலங்களிலும் பண்ணிசைகள், பன்னிரு திருமுறைகள் ஓதுவதும் தனிச் சிறப்பாகும். இவ்வாலயத்தின் பக்தி மேலீட்டினால் பல பண்டிதர்கள், கலைஞர்கள், புலவர்கள் பல பாமாலைகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளனர். சில பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு முருகனின் புகழை மணக்கச் செய்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் மகாவித்துவான் வீரமணி ஐயரினால் இணுவைக்கந்தன் மீது பாடப்பட்ட கீர்த்தனைகளில் ஒரு தொகுதியான பன்னிரு பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

இவ்வாலயத்தின் வடபால் வாழும் இசைக்குடும்ப உறுப்பினரான வெளிநாட்டில் வசிக்கும் இளைஞரின் பக்திப் பரவசத்தால் தென்னிந்திய புகழ் இசை மேதை நித்தியஸ்ரீ மகாதேவனின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இவ்விடத்தில் வெளியிடப்பட்டது. இவ்வொலி நாடாக்கள் இவ்விடம் மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகெங்கும் மதுர கானமாக இணுவில் கந்தனின் புகழை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாலயத்தின் தொண்டுப் பணிகள் யாவும் இவ்வூர் இளந்தொண்டர் சபை உறுப்பினர்களால் கடந்த முப்பத்தாறு வருடங்களாக வெகு சிறப்பாகவும் புனிதமாகவும் பக்தி பூர்வமாகவும் நடாத்தப்பெறுகின்றன.

இவ்வாறு பல சிறப்புக்களுக்கும் உறைவிடமான இவ்வாலயத்தில் உள்வீதியில் தல விருட்சமான நொச்சி வளர்கிறது. நான்கு வீதிகளிலும் மருது, அரசு, வேம்பு, ஆல், பலா, நெல்லி, இத்தி, கடம்பு, வன்னி, பன்னீர், செண்பகம், சிவலிங்கப்பூ மரங்கள், உருத்திராக்கம், வில்வை, புளி, சந்தனம், சாம்பிராணி, மகிழ், தென்னை போன்ற தெய்வீக மரங்கள் ஆலயச் சூழலில் பல்லாண்டுகளுக்கு முன் நாட்டப்பட்டு நன்கு பராமரிக்கப்படுவதால் ஆலயம் புனிதமடைகிறது. வழிபடும் அடியார்களும் புனிதமடைந்தவர்களாகவே செயற்படுகின்றனர்.

இவ்வாலயத்தின் சிறப்பை நோக்கினால் ஆலய வளாகத்தை விட மேலும் இருபத்தெட்டு நன்கொடை ஆதனங்களால் பெருமஞ்சத்தினால், பெரு வீதியினால், பெரிய கட்டடங்களால் பெரிய சூரன் மற்றும் சிறப்பான வாகனங்களினால், இசைகளின் சிறப்பினால் பெரிய கோயிலென்றே அழைக்கப்படுகிறது. மேலும் இவ்வாலயத்தின் சிறப்பினால் காங்கேசன் துறை பிரதான வீதியில் அமைந்துள்ள இணுவில் சந்தி கோயில் வாசல் என்றே அழைக்கப்படுவதை யாவரும் அறிவர். இணுவில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலுள்ள சிறப்பு வாய்ந்த முருகன் ஆலயங்களுள் ஒன்றாக அமைந்தமை இணுவையூர் கந்தப்பெருமானின் தனிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

ஆரம்ப காலத்தில் வாசற்கோபுரம் அமைந்தபோது முருகப்பெருமான் தேரிற் பவனி வந்து இளைப்பாறுவதன் பேரில் அமைக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபம் அழிவுறு நிலையில் காணப்பட்டது. இதனை நோக்கிய ச.அரியராசா என்பவர் தமது உபயமாக இவ்வூஞ்சல் மண்டபத்தைப் புனர்நிர்மாணஞ் செய்ய முற்பட்டார். சுவாமிகள் அமரும் பீடக்கல்லை விட ஏனைய கட்டடம் யாவும் முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் அரியதோர் அறுகோண மண்டபம் பல லட்சம் ரூபா செலவில் அழகுற அமைந்தமை இணுவில் கந்தப்பெருமானின் பெருங் கருணைக்கு எடுத்துக்காட்டாகும்.

2018 ஆம் ஆண்டு கைலாசவாகன திருவிழா உபாயகாரர்களினால் இலங்கையிலே மிகப்பெரிய கைலாச வாகனம் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் கண்டு ஒவ்வொரு கைலாச வாகன திருவிழாவிற்கு மிகச்சிறப்பாக வீதியுலா வருகின்றது. ஆலய வடக்கு வீதியில் மயில்கள் வளர்க்கப்படுகின்றன. பல்வேறு சிறப்புக்களையும் அற்புதங்களையும் கொண்ட ஞான பண்டிதன் இணுவில் திருவூரில் சமயநெறி, கல்வி, கலை, கலாசாரம் மேலோங்கவும் தமது வட, தென் பகுதியில் செகராசசேகர, பரராசசேகர விநாயகர்களின் கருணையுடன் காஞ்சிக்குமரனாக அமர்ந்து அருளாட்சி புரிவதால் இணுவை மாதா யாவராலும் போற்றப்படுகிறாள்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?