ஆலயங்கள்

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில்

ஏரார் இணுவில் வாழ் எந்தை கணபதியின்
தாரார் திருவடியைத் தாழ் பணிந்தோர் – ஆரா
அமிழ்தம்போல் வாழ்வார் அருட்செல்வம் சூழ்வர்
தமிழுள்ளவுந் தழைத்து
-திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்-

யாழ் மண்ணில் சிங்கைப் பரராசசேகர மன்னன் அரசாண்ட காலத்தில் அரச பணியாக ஊர் உலா வரும் போது இயற்கை வனப்பும் தெய்வீக அலை வீசுவதுமான இணுவில் திருவூரின் ஊடாகச் சென்றான்.  இவன் தனது சைவசமய பக்தியின் காரணத்தால் ஏற்கனவே பல ஆலயங்களை அமைத்தவன். இணுவில் திருவூரின் பொலிவைக் கண்டதும் ஒரு விநாயகர் ஆலயம் நிறுவ முன்வந்தான். இதன் பேறாக இணுவில் தெற்கில் அற்புதமானதோர் விநாயகர் ஆலயம் தோன்றியது. இவன் தனது மந்திரி, பிரதானிகளுடன் பல தடவை இவ்வாலயத்துக்கு வந்து தரிசித்துச் சென்றான்.

இவ் வழிபாட்டின் சிறப்பு இவ்வூர் மக்களைக் கவர்ந்ததால் இவ் ஆலயத்தின் உள்வீதிச் சுவரில் ஏனைய படங்களின் மத்தியில் பரராசசேகரன் வழிபட்ட காட்சியின் சுவர் ஓவியமும் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகிறது. இதனால் இவ்வற்புதமான விநாயகராலயம் பரராசசேகரப்பிள்ளையார் கோயில் என அன்று தொட்டே வழங்கி வருகிறது.

இவ்வாலயம் பொதுமக்களின் சமய ஆர்வங் காரணமாகச் சிறப்புடன் இயங்கி வந்தது. இச் சிறப்பினால் ஐநூறு வருடங்களுக்கு முன் ஐம்பொன்னினாலான விநாயகரின் திருவுருவச்சிலை இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு ஆலய வழிபாட்டை அலங்கரிக்கிறது. ஆலய தரிசனத்துக்காக இங்கு வரும் பக்தர்கள் பொங்கலுக்காகவும் இளைப்பாறுவதற்குமாக ஆலய முன்றலில் ஒரு மடத்தை நிறுவினர். ஆலயத்தின் புதுமையும் மடத்தின் சிறப்பும் மக்களிடையே சமய வழிபாட்டின் சிறப்பை உணர்த்தியதால் இவ்வாலயம் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் என்று இன்று வரை வழங்கப்படுகிறது. சமய பக்தி நெறியும் ஓங்கியது.

போர்த்துக்கேயர் வருகை

தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவென இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை யெல்லாம் இடித்தழித்து வந்தனர். இதனால் பீதியுற்ற மக்கள் விநாயகரின் திருவுருவச் சிலையை மடத்தின் முன்னால் மணலில் புதைத்து விட்டனர். ஆலயத்தை அழிக்கவென வந்த அந்நியரிடம் “இது கோயிலல்ல சனங்கள் நிழலுக்காக வந்து தங்கும் மடம்” என்று கூறினர். அவர்களும் இவ்வாலயத்தை இடிக்காது விட்டுச் சென்றனரென செவி வழிச் சான்றுகள் பகர்கின்றன. தொடர்ந்து ஆலய தரிசனமின்றிய மக்கள் ஆசாரம் பேணித் தமது பக்தியின் பேறாக அகவழிபாட்டை மேற்கொண்டனர். இவ்வாறு இருநூறு வருட காலத்துக்கு மேல் இந்து சமய
வழிபாடு அருகியது.

ஒல்லாந்தராட்சியின் பிற்பகுதியில் எமது சமய நெறியின் மீதான கட்டுப்பாடு குறைந்ததால் மக்கள் தமது இயல்புக்கேற்பச் சிறு குடிசைகள் அமைத்து வழிபட்டு வந்தனர். அக் காலத்தில் எம் மக்கள் விவசாயத்தையும் சுருட்டுக் கைத்தொழிலையுமே தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்தனர். இவர்களின் வருமானம் குன்றிய காரணத்தால் ஆலயம் போன்ற பொது அறப்பணிக்கு உதவ முடியாதிருந்தது. சிறுகச் சேர்த்த நிதியுடன் தமது உடலுழைப்பையும் மூலதனமாகக் கொண்டு சுண்ணாம்புக் கலவையினால் சிறிய ஆலயமாக அமைத்து வழிபட்டனர். சுண்ணாம்புக் கட்டடம் 1800 ஆம் ஆண்டளவில் நிறைவு கண்டதும் ஆலய வளர்ச்சி ஆரம்பமானது.

ஆடம்பரமின்றியே பூசைகள், விழாக்கள் அமைந்தன. இக்காலத்தில் அலங்கார உற்சவங்களும் பிள்ளையார் பெருங்கதைப்படிப்பும் கஜமுகாசுரன் போரும் நடைபெற்றன. இவ் ஆலயப் பூசைகள் யாவும் அன்று தொட்டு அந்தணச் சிவாச்சாரியார்களால் நடத்தப்படுவது சிறப்பாகும்.

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் தேர்த் திருவிழா

ஆலயப் பணியேற்ற குருக்கள்

பரம்பரையினர் தமிழ் இலக்கண இலக்கியம், வடமொழி யாவற்றையும் சிறந்த கல்விமான்களிடமும் பிற்காலத்தில் நாவலர் பெருமானிடமும் நன்கு கற்றுத் தேறிய கல்விமானாகிய சிவஸ்ரீ நடராசையர் என்பவர் ஆலயப் பூசையை வெகு சிறப்பாக நடாத்தி வந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் வழித் தோன்றல்களான சிவஸ்ரீ சின்னையாக் குருக்கள், சிவஸ்ரீ சதாசிவக் குருக்கள் அவர்களைத் தொடர்ந்து சாம்பசிவக் குருக்கள், வைத்தீஸ்வரக் குருக்கள், சிவஞானக்குருக்கள், சோமாஸ்கந்தக் குருக்கள் அவரின் மகன் அரவிந்தக் குருக்கள் இளைய மகன் பிரசன்னா குருக்கள் ஆகியோர் பூசைகள் விழாக்களை ஆசார சீலத்துடன், பக்தி பூர்வமான தூய நெறியுடனும் இன்று வரை நடாத்தி வருகின்றனர்.

இவ்வாலய மூலமூர்த்தியாகிய விநாயகப் பெருமானின் கருங்கல்லினாலான திருவுருவம் இந்தியாவில் செதுக்கப்பட்டு இங்கு தருவித்து 1800 களில் நிறுவப்பட்டதாக அறிய முடிகிறது. சுண்ணக் கலவையால் அமைக்கப்பட்ட ஆலயம் வைரக்கற்களால் அமைப்பதன் பேரில் 1928 ஆம் ஆண்டு பாலஸ்தானம் செய்யப்பட்டது. இப்பாரிய வேலைக்குரிய நிதி வளம் குன்றியதால் வேலைகள் மந்தமாகவே செயற்பட்டன. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபமும் வேலைகள் முடிந்தபோதும் இவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத குறை வேலையாகவே காணப்பட்டது. 1939 கார்த்திகை மாதம் பெய்த பெருமழை காரணமாக விக்கிரகங்கள் பாலஸ்தாபனஞ் செய்த இடம் சற்றுப்பள்ளமாக இருந்ததால் அப்பகுதியினுள் பெருவெள்ளம் பூசைவழிபாடு ஏதும் செய்யவியலாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆலய சிவாச்சாரியாரின் ஆலோசனைப்படி 1939 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு சுபதின வேளை இரவு பதினொரு கும்பம் வைத்து வேண்டிய கிரியைகளையுஞ் செய்து அன்றிரவே கும்பாபிசேகம் நடைபெற்றது. ஆலய சிவாச்சாரியாரான சிவஸ்ரீ சதாசிவக்குருக்கள் கும்பாபிசேகத்தை நிறைவேற்றினார். தொடர்ந்து பன்னிரு நாட்கள் அபிசேகங்கள் செய்யப்பட்டன. ஆலயத் திருப்பணி வேலைகள் தொடர்ந்து செய்ய நிதிவளம் போதாததால் காலமும் கடந்து சென்றது. ஆலயத் திருப்பணி நிறைவடையாததால் ஆலயப் பெருவிழாக்கள் நடைபெறாது அலங்காரத் திருவிழாவாகவே நடைபெற்றன. ஆலய நிதி மிகக்குன்றியதால் குடை போன்ற அத்தியாவசியப் பொருட்களுமின்றித் தேவைப்படும் போது ஏனைய கோயில்களில் இரவல் வாங்கியே உபயோகிக்கப்பட்டன.

ஆலய வருமானக் குறைவால் இவ்வாலயப் பூசையைப் பொறுப்பேற்ற சிவஸ்ரீ சதாசிவக்குருக்கள் தமது வாழ்வாதாரமும் குன்றிய நிலையில் ஆலயப் பூசையும் கிரமமாக நடைபெறாதிருந்தது. பக்தி மேலிட்ட ஒரு சில இளம் அடியார்கள் குருக்களிடம் பூசையைக் கிரமமாகச் செய்யுமாறு பணிந்தனர். குருக்கள் அவர்களை நோக்கி ஒரு பணம் கொடுத்து அர்ச்சனை செய்வாரெவருமில்லாத போது தமது வறுமையையும் தெரிவித்து ஆவன செய்தால் பூசைகள் கிரமமாக நடைபெறுமென்றார். இச்சம்பவம் 1945 இல் நடைபெற்றது.

விநாயகப் பெருமானின் திருவருளினால் நான்கு வாலிபர்களும் ஆலயச் சூழலிலுள்ள வீடுகளுக்குச் சென்று விநாயகரின் பூசைக்கெனப் பிடியரிசி கோரினர். ஆலயச் சூழலில் வாழ்ந்த இல்லத்தரசிகளும் நாளாந்தம் உலையிலிடும் அரிசியில் விநாயகப் பெருமானை எண்ணி ஒரு கைப்பிடி அரிசி சேமித்து வைத்து அரிசி சேகரிக்க வருவோரிடம் வழங்கினர். சராசரி மாதாந்தம் நாற்பது கொத்தரிசி கிடைத்தது. இதில் அரைவாசியைக் குருக்களிடம் வழங்கினர். மிகுதி அரிசியை விற்று ஆலய விளக்கேற்றல் மற்றும் அவசிய பணிகளுக்கு உபயோகித்தனர்.

                          பரராஜசேகப்பிள்ளையார் பஞ்சமுக விநாயகர் 

ஆலய வளர்ச்சி

பொதுமக்களின் உள்ளார்ந்த சமயப் பற்றை உணர்ந்த விநாயகப் பெருமான் கிள்ளிக்கொடுத்த ஏழைகளுக்கு அள்ளிக்கொடுத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினார். அவர்களின் புதிய வேலை வாய்ப்பும் நிதிவளமும் பெருகி அறச்சிந்தனையும் உயர்ந்தது. ஆலயத்தின் வளர்ச்சி கருதி ஆலய வடக்கு வீதியினுள் ஆலயத்தின் அமைவாக ஒரு கடையை நிறுவி அதனை ஐக்கிய பண்டகசாலைக்கு உதவினர். மாதா மாதம் வாடகைப் பணம் கிடைத்தது. உள்ளூர் மக்கள் தமது உபதொழிலான சுருட்டுக் கைத்தொழில் மூலம் நாளாந்தம் ஒரு கட்டுச்சுருட்டுக் கூலியை வழங்கினர்.

வர்த்தகர், அரச ஊழியர் தமது வாழ்வில் ஏற்றங் கண்டதால் ஆலயத் திருப்பணிக்கு உதவினர். இதன் பேராக பல கட்டிடங்கள் புதுப் பொலிவுடன் எழுந்தன. பொது மக்களின் பக்தியும் நிதி வளமும் பெருகவும் ஆலயப் பணிகள் சிறப்படைந்தன. விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி விழா 1956 இல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல திருப்பணிகள் நிறைவெய்தியதும் 1961 தை மாதம் ஒன்பதாம் திகதி மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. இதே ஆண்டு வைகாசி மாதம் சதய நட்சத்திரத்தில் கொடியேற்ற விழா ஆரம்பிக்கப் பெற்று பத்தாம் நாள் தேர் உற்சவமும் பதினோராம் நாள் புனர்பூசத்தன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்றது. இவ்வாறு வருடா வருடம் பெருவிழா நடைபெறுகிறது.

இக்காலத்தில் சிவஸ்ரீ சதாசிவக் குருக்களே பிரதம குருவாக இருந்து யாவற்றையும் மேற்கொண்டார். இவ்வருடம் முதல் கட்டுத் தேர் கட்டியே விழா நடைபெற்றது. இறையருளும் மக்களின் மனநிறைவான நிதிவளமும் பெருகவும் ஆலயத்தின் மணிக்கோபுரம் கட்டப்பட்டு 1700 இறாத்தல் நிறையுள்ள கண்டாமணி இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்டு 1962 இல் அதற்கான கும்பாபிசேகம் நடைபெற்றது.  1966-04-05 ஆம் திகதியன்று விநாயகப் பெருமானின் புதிய சித்திரத் தேர் உருவாகி வெள்ளோட்டம் கண்டது. எம்பெருமானுக்குரிய இராசகோபுரம் ஒரு வருடமாக அமைக்கத் தொடங்கி 65 அடி உயரத்தில் அழகிய தோற்றத்துடன் அமைந்து 04.09.1972 அன்று கும்பாபிசேகம் நடந்தேறியது.

இச்சிறப்பான மகா கும்பாபிசேகத்தைத் தொடர்ந்து 1975 இல் முருகப் பெருமானுக்கும் 1976 இல் சண்டேஸ்வரருக்கும் புதிய இரு சித்திரத்தேர்கள் உருவாக்கப்பட்டன. இதனால் ஆலயப் பெருவிழாவின் சிறப்பாக மூன்று சித்திரத் தேர்கள் பவனி வருவது அரியதோர் நிறைவான காட்சியாகும். 1972இல் நடைபெற்ற கும்பாபிசேகத்தினம் வழமையாக ஆவணி மாதத்தில் அலங்கார உற்சவமாக நடைபெற்று வருகின்றது. இவ்வலங்கார உற்சவ இறுதி நாளை விசேடமாக எண்ணிய பக்தர்கள் 1973 – 1976 ஆகிய நான்கு வருடங்களும் உயிரோட்டமான சிறப்பான விழாவில் உயிருள்ள யானை மீது எம்பெருமான் வீதியுலா வர ஏற்பாடுகள் செய்தனர். இதன் பேறாக கண்டியிலிருந்தும் கொழும்பிலிருந்தும் நான்குமுறை உயிரான யானைகளை அழைப்பித்து வீதியுலாவுடன் விழாவினைச் சிறப்பித்தனர்.

இச் சிறப்பின் தொடர் பாக 1977 இல் கும்பாபிசேகத் தின விழாவில் தென்னிந்திய பிரபல பாடகர்களான சூலமங்கலம் சகோதரிகளின் இன்னிசைக் கச்சேரியையும் ஏற்பாடு செய்து பெருந்திரளான சங்கீதப் பிரியர்களுக்கு இசை விருந்தளித்தனர். விநாயகப் பெருமானின் மீதிருந்த சமய பக்தியும் நிதிநிலைமையும் தமது சூழலிலுள்ள ஆலயம் சிறப்புடன் விளங்க வேண்டுமென்ற ஆர்வமும் மிக்க அன்பர்கள் ஐம்பொன்னினாலான பஞ்சமுக விநாயகரின் திருவுருவச் சிலையை வடித்து 1977 இல் சந்நிதியமைத்து குடமுழுக்கிட்டனர். 1978 இல் வசந்த மண்டபத்துக்கருகே புதிய சந்நிதி அமைத்து கஜலட்சுமியின் எழுந்தருளித் திருவுருவம் (ஐம்பொன்) நிறுவப்பட்டு வருடா வருடம் ஆடி மாதத்தில் சுமங்கலி பூசையும் விரதமும் ஏற்பாடு செய்து வீதியுலாவும் நடைபெறுகிறது.

இவ்வாலயப் பெருந் திருவிழா உபயகாரர் இரண்டாந் திருவிழா அன்று பவனி வருவதற்கான கைலாச வாகனத்தை 1981 இல் வீதியுலா வரச் செய்தனர். இதே போல ஆறாம் திருவிழா உபயகாரரினால் திருமஞ்சமொன்று 1985 இல் உருவாக்கப்பட்டு வருடா வருடம் எம்பெருமான் திருமஞ்சத்தில் வீதியுலா வரச் செய்துள்ளனர். பக்கதர்கள் கூட்டமும் சிறப்பான விழாக்களும் விழாக் காலத்தில் உள் வீதியின் நெருக்கடியைத் தவிர்க்க உள்வீதி அகலிக்கப்பட்டு 1984இல் தை மாதம் மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. இவ்விழாவில் கந்தசுவாமி கோயிலிலிருந்து 108 பாற்காவடிகள் வந்து 108 பாற்குடங்களும் சேர 1008 இளநீரால் எம் பெருமானுக்கு அபிசேகஞ்செய்து மன நிறைவடைகின்றனர்.

1984 இல் தெற்கு வீதியிலிருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையின் ஒரு பகுதி இட மாற்றஞ் செய்யப்பட்டு ஆலய வடக்குப் பகுதியிலிருந்த பாடசாலையுடன் நிறுவப்பட்டது. இதே போல தெற்கு வீதியிலிருந்த கணேசா சனசமூக நிலையமும் அவ்விடத்திலிருந்து இடமாற்றப்பட்டது. இப்புனித பூமியில் அழகியதோர் திருமண மண்டபம் அமைக்கப்பட்டது. 1977 இல் நர்த்தன விநாயகர் திருவுருச் சிலை புதிய சந்நிதியில் அமைக்கப்பட்டு மகாகும்பாபிசேகமும் நடாத்தப்பட்டது. 2001 இல் புதியதோர் தீர்த்த மண்டபம் அமைக்கப்பட்டது. 2007இல் ஆலய தெற்கு வாசலில் 37 அடி உயர இராசகோபுரம் அமைந்தது. 01.02.2009 இல் மேற்கு வீதியில் 39 அடி உயரக் கோபுரமும் வடக்கே 49 அடி உயரமான கோபுரமும் அமைக்கப்பட்டன.

ஆலய ஊர்திகள் (வாகனங்கள்)

ஆலய வசதிக்காகவும் சமய கலாசாரம் பேணவும் ஆலய மேற்கு வீதியில் இரு அன்பர்களின் உபயமாக நவீன தரமுடைய மூன்று மாடி மணி மண்டபம் 09.05.2004 அன்று நிறுவப்பட்டது. 1945இல் இவ்வாலயத்தின் நித்திய பூசைகளைக் கிரமமாகச் செய்ய இயலாத நிலை இருந்தது. மேலும் விநாயகப் பெருமானுக்கு வீதியுலாவின் போது உபயோகிக்க ஒரு குடையில்லாமல் இரவல் வாங்கி வீதியுலாச் செய்த அடியார்கள் தமது இயலாமையை எம்பெருமானிடம் விண்ணப்பித்து மனமுருகிய நிலையை யுணர்ந்த எம் பெருமான் அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தியதால் தமது சொந்தச் செலவில் கோபுரம் கட்டும் ஆற்றலையும் தந்து தமது திருவிளையாடலை உணர்த்தியுள்ளார்.

இன்றைய நிலையில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் நான்கு வீதியிலும் நான்கு வானுயர் இராசகோபுரங்கள் அதற்கமைவான உயரத்தில் மணிக்கோபுரம், முன் பக்கம் பாலகணபதி, பாலமுருகன் சந்நிதிகளும் அலங்கார வளைவுகளும் வெளி வீதியில் உட்புறத்தே நாற்புறமும் அலங்கார பண்டிகை வேலைகளும் வாசலில் தீர்த்த மண்டபமும் அலங்கரிக்கின்றன. உள் வீதியில் உள்ளும் புறமும் வேறு சந்நிதிகள் அமைக்க முடியாதவாறு தெய்வங்களின் சந்நிதிகளும் அழகிய வர்ண ஜாலங்களை மிகைப்படுத்தும் காட்சிகளும் எவரையும் தன்பால் ஈர்க்கும் அருளுணர்வு விநாயகரின் பெருமையை உணர்த்துகிறது.

நாளாந்தம் பூசைகள் ஆரம்பிக்கும் காலைவேளை நித்திய அக்கினி வளர்த்து தொடங்கும் பூசையுடன் ஆறு நேரப்பூசையும் அபிசேகங்களும் விழாக்களும், பெருவிழாக்களின் சிறப்பும் நாளாந்த புராண படனமும் சைவத்தின் பெருமைக்குச் சான்றாகும். பெருவிழாக்காலங்களில் பவனி வருவதற்கென முப்பதுக்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகளும் வெளிவீதியுலாவுக்கான கயிலாய வாகனம், மஞ்சம், சப்பறம், தேர்கள் யாவும் விநாயகப் பெருமானின் அற்புதத்தை அறிய வைக்கிறது. இச்சூழலில் வாழும் அடியார்கள் தம்பணி சிறக்க விநாயகப் பெருமானின் மீளா அடிமைகளாகித் தமது அர்ப்பணிப்பாக ஆலயப் பணி யாவற்றையும் உள்ளன்போடு நிறைவேற்றி இன்பங் காண்கின்றனர்.

வீதியுலாவின் போது அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏனைய பிஞ்சுப் பாலகர்கள் வயது வேறுபாடின்றி ஆண், பெண் அடியார்கள் யாவரும் கணபதியின் மீது தம்மை அர்ப்பணித்து திருமுறைகள் ஓதி இறைவனை இசைவிக்கின்றனர். இவ்வாறு பல சீர்களையும் தமக்கென அமைக்க அருளிய விநாயகப் பெருமானின் புதுமை எமது சீர் இணுவைத் திருவூரின் முன்னுரிமைச் சிறப்பைப் பிரகாசிக்க வைக்கிறது. இது அறப்பணி சேர்ந்த அறவாழ்வினைத் துலக்குகின்றது. அடுத்த கும்பாபிஷேகத்திற்காக தற்போது பாலஸ்தாபனம் இடம்பெற்று புனருத்தாரண வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?